வியாழன், 12 மார்ச், 2020

நூல் அறிமுகம் :இந்திய கல்விப் போராளிகள்

நூல் விமர்சனம்:

"இந்திய கல்விப் போராளிகள்"

நான் எழுதும் எழுத்துக்களை மின் விசிறிக்கு கீழோ அல்லது குளிரூட்டப்பட்ட அறையின்  இருக்கையிலோ அல்லது பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டோ படித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் பெற்ற கல்வி அவ்வளவு  சாதாரணமாக உங்களுக்கு வாய்த்துவிடவில்லை.  ஏராளமான சமூக சீர்திருத்தவாதிகளின் , உண்மையான கல்வியாளர்களின் இரத்தத்திலும் மரணத்திலுமே இத்தகைய கல்வியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை உணரவைக்கும் புத்தகம்தான் ஐயா 'ஆயிஷா‌' இரா. நடராஜன் அவர்கள் எழுதிய இந்த "இந்தியக் கல்வி போராளிகள்".

இந்தப் புத்தகத்தில் மொத்தமாக 22 கல்விப்  போராளிகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அவர்கள் தங்கள் வாழ்வில் எவ்வளவு இன்னல்களை சந்தித்து இந்திய மண்ணில் உள்ள சாதாரண மனிதனுக்கும் தங்கள் இரத்தத்தை சிந்தி கல்வியை வழங்கியிருக்கிறார்கள் என்பதை கூறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது. ஒவ்வொருவரைப் பற்றிய செய்திகளை படிக்கும் போதும் உண்மையில் ஒரு ஆசிரியனாக வெட்கித் தலை குனிகிறேன். 

மாணவர்களுக்கு கல்வியில் ஏதோ ஒரு சிறிய மாற்றத்தை பள்ளியில்  கொண்டுவர நாம் போராடுகிறோம். அதில் சிறு தொய்வோ இடையூறோ ஏற்பட்டுவிட்டால் துவண்டு விடுகிறோம் அல்லது இடையூறு ஏற்படுத்துபவரை வசைபாடி விட்டு அந்த வேலையை பாதியிலேயே விட்டு விடுகிறோம். ஆனால் இந்த புத்தகத்தில் இருப்பவர்களை பற்றி நீங்கள் படித்து விட்டால் இனி எத்தனை பெரிய இடையூறுகள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய பக்குவம் உங்களுக்கு வந்துவிடும். நாம் பள்ளியில் தான் போராடுகிறோம் ஆனால் இந்தப் புத்தகத்தில் இருப்பவர்களோ ஆங்கிலேய கம்பெனி அரசாங்கத்திடம், சக இந்திய மனிதர்களிடம், மதவெறியர்களிடம், ஜாதி கூட்டங்களிடம் போராடியிருக்கிறார்கள். போராடியவர்கள் மட்டுமல்ல தங்கள் போராட்டத்தில் வெற்றி கண்டவர்கள். 

பெக்ராம்ஜி மலபாரரி குழந்தை திருமணங்களை தடுத்து அவர்களை பள்ளிகளில் சேர்த்தவர், அடிப்படை கல்வி மாணவர்களுக்கு தேவை என்பதை உணர்த்திய கவுரி பார்வதி பாய், ஆசிரியர் பயிற்சியை இந்தியாவுக்கு அறிமுகம் செய்த ஈஸ்வர சந்திர  வித்யாசாகர், முதன்முதலில் குல கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சாயாஜிராவ் கெய்க்வாட், இந்தியக் கல்வியின் பிரம்மாண்ட கலகவாதி என்று கூறப்பட்ட கேஷப் சந்திர சென், கட்டாய இலவசக் கல்வியின் முதல் போராளி கோபால கிருஷ்ண கோகலே, பெண்கல்வியின் ஜான்சிராணி என்று போற்றப்படுகிற ரமாபாய் ரானடே, இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடங்கிவைத்த ஜாம்ஷெட் ஜிஜி பாய், தலித் மக்களை பொதுக்கல்விக்குள் புகுத்தி விட்ட அய்யன்காளி இப்படியாக இன்றும் நம் பாடபுத்தகத்தில் அறிமுகப்படுத்தாத சாதனை மனிதர்களைப் பற்றிய புத்தகம்தான் இது.

ஒருவேளை நீங்கள் ஆசிரியர் என்றால் நிச்சயமாக உங்கள் புத்தக அலமாரியில் இருக்க வேண்டிய புத்தகம் இது. நீங்கள் பெற்றோர் என்றால் ஒருமுறையேனும் படித்து விடவேண்டிய புத்தகம் இது. நீங்கள் ஆட்சியாளர்கள் என்றால் இதைப் படித்துவிட்டு உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கல்விமுறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியது உங்கள் பொறுப்பு. 

நம் போதிக்கும் கல்வி முறை ஒன்றே நம் அடுத்த தலைமுறையை இந்த பூமியில் மகிழ்ச்சியாக வாழ வைக்க முடியும் என்பதை உணரவைத்த ஐயா ஆயிஷா நடராஜன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்!!!

இந்திய கல்விப் போராளிகள் - துதிக்கப்பட வேண்டியவர்கள்

நூல் : இந்திய கல்விப் போராளிகள்
ஆசிரியர் : 'ஆயிஷா‌' இரா. நடராஜன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ. 100/-

விமர்சனம்: 
பா.‌‍‌ ஸ்ரீமலையப்பன்

3 கருத்துகள்:

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...