ஞாயிறு, 8 டிசம்பர், 2019

பாலும் மீன்களுமே வாங்கிக்கொண்டிருந்தவள் - நூல் அறிமுகம்

ஒரு வாரத்திற்குள் ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்று தோன்றி ஒரு வாரத்திற்குள் அந்த புத்தகத்தை வரவழைத்து ஒரு வாரத்திற்குள் அதைப்  படித்து முடித்திருக்கிறேன். நிச்சயமாகவே  எனக்கு இது ஒரு புதிய அனுபவம். 
அப்படி என்ன புத்தகம்? 

அய்யப்பமாதவன் அவர்கள் எழுதிய "பாலும்  மீன்களுமே வாங்கிக்கொண்டிருந்தவள்". மொத்தமாக 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. இதன் முதல் பதிப்பு 2009-  இல் வெளிவந்திருக்கிறது. 

புத்தகத்தில் உள்ள அனைத்து சிறுகதைகளும் மிகவும் காத்திரமான கருத்துகளை எடுத்துக் கூறுபவை. ஒரு கதையினை படித்து முடித்த பிறகு அடுத்த கதைக்கு போவதற்கு நிறைய அவகாசம் தேவைப்படுகிறது.  இவருடைய கதைகளை படிக்கும் போது மனிதர்களை விட விலங்குகளை பச்சிளம் குழந்தைகள் போல் ஏன் நாம் பேண வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகிறது. அதில் இறுதி கதையான ரோஸி என்னை மிகவும் கவர்ந்தது. 

ஒரு திறமையான மனிதனை இந்த உலகம் பாடாய் படுத்துவதில் அவன் எவ்வாறு தடம் மாறுகிறான், ஒருத்தி எவ்வளவு அழகாக இருந்தாலும் ஒரு சிறு குறை அவளது வாழ்வினை எவ்வாறு புரட்டிப்போடுகிறது, பூனைகளை மட்டுமே துணையாக்கி கொண்டிருக்கும் ஒருத்தியை இந்த சமூகம் பார்க்கும் விதம், ஒரு எலியால் துன்பப்படும் ஒரு நடுத்தர குடும்பத்தின் உணர்வுகள், மனைவியிடம் ஒரு சிறு பொய் சொல்லி அதை அதை மறைப்பதற்குள் ஒரு கணவன் அல்லல்படும் விதம் என்று இவர் தொட்டிருக்கும் ஒவ்வொன்றுமே கிளாசிக் ரகம். 

நடுத்தர வர்க்கத்தின் மைண்ட் வாய்ஸ் இவருக்கு மட்டும் ரொம்ப அழுத்தமாக கேட்டிருக்கிறது.இருப்பினும் முதல் மூன்று சிறுகதைகளுக்கும் 18+ இல் உள்ளவர்கள் மட்டுமே படிக்க வேண்டியவை. என்னை பொறுத்தவரை இதை கொஞ்சம் சென்சார் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.  இருந்தாலும் அந்த மூன்று கதைகளின் முடிவுகளும் கதைக்கு நியாயம் செய்யாமல் இல்லை. இருந்தாலும் ஒரு உச் கொட்டாமல் இருக்க முடியவில்லை. 

இறுதியாக நடுத்தர மனிதர்களின் உணர்வுகளை அப்படியே படமெடுத்து , கலரூட்டி, பிரேம் போட்டு அனைவரும் பார்க்கும் படியாக மாட்டிவிட்டிருக்கிறார் அய்யப்பமாதவன் அவர்கள்... இந்த சிறுகதைகளின் வாயிலாக இன்னும் கொஞ்சம் உயிரூட்டியிருக்கிறார்.

 பாலும் மீன்களையும் யாரோ ஒருவர் மட்டுமே வாங்கிக் கொண்டிருக்காமல் நாமும் வாங்கி கொடுக்க முன்வந்து நம்முடைய மனநிலையை தகவமைத்துக் கொள்ளும்போது மனிதம் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நூல் : பாலும் மீன்களுமே வாங்கிகொண்டிருந்தவள்.
ஆசிரியர் : அய்யப்பமாதவன்
வெளியீடு : ஜீரோ டிகிரி
விலை : ரூ.100/-

விமர்சனம்: ஸ்ரீ மலையப்பன்

வியாழன், 5 டிசம்பர், 2019

ஜோன் ஆஃப் ஆர்க் - நூல் விமர்சனம்

*ஜோன் எனும் பணிப்பெண்*

பிரான்ஸ் நாட்டில் தொம்ரெமி என்ற சாதாரண கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து  பிரிட்டிஷ் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஒற்றை ஆளாக சென்று வென்று சார்லஸ் மன்னனுக்கு முடிசூட்டிய வீரப் பெண்மணி தான் இந்த நூலின் தலைவி *ஜோன் ஆஃப் ஆர்க் அவளது மொழியில் சொல்லப்போனால் ஜோன் எனும் பணிப்பெண்*.

இந்த நூல் நம்முள்ளே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. உதாரணமாக ஒரு விஷயத்தை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறேன். ஒரு 16 வயதே ஆன சிறுமி மிகப்பெரிய படையை ஒற்றை ஆளாக வழிநடத்தி செல்வது என்பது அவள் கொண்ட மனோதிடத்தினால் மட்டுமே இருக்கலாமே அன்றி ஜோன் சொல்வதை போல அது கடவுளின் சித்தம் என்றெல்லாம் என்னால் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை. 

இது ஒருபுறமிருக்க இந்த காலத்திலேயே பெண்கள் எந்த சாதனை செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் ஆண் சமுதாயம் இருக்கும்போது அன்றைய காலகட்டத்தில் அதுவும் 1420 களில் ஒரு பெண் தனியாக இத்தனை பெரிய போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி கொள்வது என்பதெல்லாம் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த ஆண் சமுதாயம் ஏற்றுக்கொள்ளாமல் போனதே ஜோன் எனும் பெரிய வீரமங்கையை நாம் இழந்ததற்கு காரணமாக இருக்க முடியும்.

இத்தனை பெரிய சிந்தனை நமக்கு எழும் அளவிற்கு இந்த நூலின் ஆசிரியர் *ரஞ்சனி நாராயணன்* ஜோன் ஆஃப் ஆர்க் பற்றிய ஒவ்வொரு குறிப்புகளையும் தேடித்தேடி எடுத்து  புத்தகத்திற்குள் வைத்து இந்த புத்தகத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த அத்தியாயம் ஜோன் ஆஃப் ஆர்க் விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி பதில் சொல்லும் விதம் அத்தனை அழகானது. ஒரு 19 வயது பெண் இப்படி எல்லாம் பதில் சொல்வாளா என்று ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. இறுதியாக அத்தனை தூரமான தண்டனையை  அந்த சிறு வயதுப் பெண்ணிற்கு அன்றைய கிறிஸ்தவ போதகர்கள் வழங்கியது வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத கொடூரமான தீர்ப்பு. அவள் கழுவிலேற்றி தீக்கிரையாக்கப்படும் அந்த வரிகளை புத்தகத்தில் கடக்கும் போது நம்மையும் அறியாமல் கண்ணீர் வருகிறது. அதோடு மதத்தின் மீதும் அதன் மூடநம்பிக்கைகளின் மீதும் பெருத்த கோபமும் வருகிறது. 

*ஜோன் பணிப்பெண் போர்வையில் வந்த புனிதப் பெண் என்பதை ரஞ்சனி நாராயணன் தன்னுடைய எழுத்தின் மூலம் நமக்கு புரிய வைக்கிறார்.* 

நூல் : ஜோன் ஆஃப் ஆர்க்
ஆசிரியர் : ரஞ்சனி நாராயணன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ. 225/-

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...