செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்"

#புத்தக_விமர்சனம்

"முத்தன் பள்ளம்" -
"கண்ணீரும் கனவுகளும்"

இது ஒரு சீரியசான நாவல் அல்லது ஒரு வரலாற்று நூல் அல்லது வெளிப்படையாக சொல்லப்பட்ட புனையப்படாத ஒரு ஊரின் உண்மைக் கதை அல்லது உண்மை நிலை இப்படி  எப்படி வேண்டுமானாலும் இதற்கு பெயர் வைத்துக்கொள்ளலாம்.

ஒரு தேர்ந்த வரலாற்று அறிஞர் ஒரு அரசை பற்றியோ, ஒரு சமுகத்தை பற்றியோ, ஒரு அரசனைப் பற்றியோ, வாழ்ந்த மக்களை பற்றியோ, இயற்கை சூழல்கள் பற்றியோ, இப்படி எத்தனை பற்றிகளை பற்றி விவரிப்பாரோ அத்தனை பற்றிகளைப் பற்றியும் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து அலசி ஆராய்ந்து அரங்கேற்றியிருக்கிறார்.

கந்தர்வக்கோட்டை காந்தி சிலை முக்கத்தில் இருந்து போக்கிமான் பூச்சி விளையாட்டின் மூலம் புறப்படும் பயணம் முத்தன் பள்ளத்தை பற்றி மட்டும் சொல்வதற்காக அல்ல முத்தன் பள்ளத்தின் மூலமாக அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் அதன் வரலாறுகளை சிறப்பம்சங்களை குறைகளை சொல்வதாக பகுதி 1 அமைந்திருக்கிறது. பகுதி ஒன்னு முறையே அக்கச்சிபட்டி, மல்லிகை நத்தம், பெரியகோட்டை, ஒட்டப்பாலம், சொக்கம் பேட்டை, வேலாடிப்பட்டி, மஞ்சம்பட்டி, வெள்ளாள விடுதி, கல்லாக்கோட்டை இப்படியே இறுதியாக முத்தன் பள்ளம் நோக்கி போக்கிமான் பூச்சி சொல்ல சொல்ல எழுத்தாளர் செல்வதாக கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படி போக்கிமான் பூச்சி ஒவ்வொரு ஊருக்குள்ளும் எழுத்தாளரை கொண்டு செல்லும்போது அவர் கண்ணில் தென்படும் அத்தனை பதாகைகளும் ஊரை மட்டுமல்ல நாவலில் பெரும்பகுதியை மறைத்துக் கொண்டு விட்டது என்றே எனக்குப் படுகிறது.

போக்கிமான் பூச்சி, பதாகைகளை காட்டாமல் வேறு எதையாவது அடையாளமாக காட்டி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இருப்பினும் மேற்கோள் காட்டி இருக்கும் அத்தனை பதாகைகளும் தற்கால அரசியலை, அரசியல்வாதிகளை, நடிகர்களை, சுயநலவாதிகளை, சாதிகளை, கட்சிகளை பதம் பார்த்து தான் செல்கிறது. இந்த ஒன்றிற்காக பதாகைகளையும் போக்கிமான் பூச்சியயையும் வரவேற்கலாம்.

அடுத்ததாக பகுதி இரண்டில் போக்கிமான் பூச்சி காலடி எடுத்து வைக்கும் இடத்தில் முத்தன் பள்ளம் இருக்கிறது. அஜித் படத்தில் வரும் அத்திப்பட்டியை விட அங்கு வாழும் மக்களின் நிலை மிக மோசமாக மோசத்திலும் மோசமான ஒன்றாக இருப்பது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. கவலையளிக்கிறது.

முத்தன் பள்ளம் ஏதோ திடீரென்று விண்வெளியில் இருந்து பறந்து வந்து அவதரித்த ஊர் அல்ல. அதன் வரலாறு மிகப்பெரியது. அதை எழுத்தாளர் மிக கவனமாக கையாண்டு இருக்கிறார். முத்தன் பள்ளம் உருவாக அதன் பின்னால் இருக்கும் பாட்டன் , அவரின் முந்தைய வரலாறு, பாட்டனின் பாட்டன் வரலாறு என்று அத்தனைக்குள்ளும் பயணித்து ஒரு வரலாற்றுப் பெட்டகமாக குறிப்பாக முத்தரையர்கள், பல்லவர்கள், பல்லவராயர்கள், சோழர்கள், நாயக்கர்கள் என அத்தனை அரசர்களும் முத்தன் பள்ளம் உருவாக காரணமாக இருந்திருக்கிறார்கள்.

இதில் முத்திரையர்களின் வீரம் முழுமையாக சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது புதுக்கோட்டை சமஸ்தானத்தை பற்றியும் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் முத்தன் பள்ளம் உருவாக எவ்வாறான உதவிகளை செய்தார் என்றும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் பாட்டனின் உழைப்பு, முத்தாயியின் மீது அவருக்கு இருந்த காதல் மிக லாவகமாக சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையாகவே அந்த ஒரே இரவில் காதல் வந்ததா என்று கொஞ்சம் நம்பத்தான் முடியவில்லை இருந்தாலும் அந்த பத்தாவது பகுதி மிகுந்த சுவாரசியமாக இருந்தது.

இறுதியாக போக்கிமான் பூச்சி முத்தன் பள்ளத்தை நோக்கி விரைந்து இறுதியாக ஊரின் கடைக்கோடியில் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்து இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு மனிதனின் தொடைக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டது மிகுந்த வேதனை தான். இறுதிப்பக்கங்கள் என்னை மிகவும் இதயம் நொறுங்க வைத்துவிட்டது.

இறுதியாக சமகாலத்தில் இருக்கும்  ஆட்சியாளர்கள் முத்தன் பள்ளத்தின் மீதும் அங்கு வாழும் மக்களின் மீதும் அவர்கள் படும் துயரத்தின் மீதும் கொஞ்சமேனும் இரக்கப்பட வேண்டும் இல்லையேல் அவர்கள் ஆட்சியிலிருந்து இறக்கப்படவேண்டும்.

ஒற்றை வரியில் இந்த முத்தன் பள்ளம் நாவலைப் பற்றி சொன்னால் போக்கிமான் பூச்சியின் மூலம் அண்டனூர் சுரா என்ற Common மேன் கண்டுபிடித்த பழங்கால வரலாற்று சொர்க்கபூமி.

#இந்த_ஆண்டில்_இதுவரை_5
#புத்தக_விமர்சனம்

திங்கள், 25 பிப்ரவரி, 2019

மரப்பசு - புன்சிரிப்பு

#மரப்பசு_விமர்சனம்

இறுதியாக 20 நாட்களுக்கு பிறகு மரப்பசு படித்து முடித்துவிட்டேன். தி.ஜா அவர்கள் இந்த கதையை ஒவ்வொரு புள்ளியிலும் மெருகேற்றியிருக்கிறார்.

ஆரம்பத்தில் இந்த நாவலை படிக்க எனக்கு பிடிக்கவில்லை ஏனென்றால் ஒவ்வொரு பத்து பக்கத்தை தாண்டும்போதும் கொஞ்சம் சலிப்போடு கடந்து வந்தேன். காரணம் பேசப்பட்ட கதை என்பது நான் சந்திக்காத சந்திக்க விரும்பாத ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இறுதியாக இந்த கதை எனக்குள் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

 பெண்களுக்கான சுதந்திரம் என்பது இந்த நாட்டில் இருக்கிறதா என்ற கேள்வியை வைத்தால் நிச்சயமாக அது ஒரு ஹைபோதெடிக்கள். ஒரு பெண் இந்த சமூகத்தில் இன்னும் குறிப்பாக இந்திய திருநாட்டில் சுய சிந்தனையின் படி வாழ விரும்பினால் அவளுக்கு பெயர் வேறு என்று இந்த சமூகம் அர்த்தம் சொல்லி வைத்திருக்கிறது.  அந்த நிலையில் ஒரு பெண் சுய சிந்தனையோடு வாழ முடிவெடுத்தால் என்னென்னவெல்லாம் நிகழுமோ அதுவே இந்த நாவல்.

மாறாக  என்னுடைய சிந்தனையில் இந்த கதையில் வரும் அம்மணி போன்றே நாட்டிலுள்ள அனைத்து பெண்களும் அப்படித்தான் இருப்பார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன்.
ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும்  குடும்பச் சூழல் என்பது வேறு சமூகம் என்பது வேறு.

அப்படி இருக்க ஏன் இப்படி ஒரு நாவலை செய்திருக்க வேண்டுமென்று யோசித்தால் அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நாவல் சமூகத்தில் தேவைப்பட்டிருக்குமோ என்னவோ? இந்த காலகட்டத்திற்கு இந்த நாவல் தேவையா என்றால் மூட நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு பெண்களை பொருளாக எண்ணம் கொள்ளும் ஆண்களுக்கு இந்த புத்தகம் நிச்சயம் தேவைப்படும்.

இதையெல்லாம் மீறி எனக்கு அவள் ஒரு தொடர்கதை, அவர்கள் போன்ற பாலச்சந்தர் படங்கள் இந்த நாவலை படிக்கும் போது என் கண்முன்னே ஓடியது. காரணம் பாலச்சந்தர் தன் படங்களில் ஒவ்வொரு சீனுக்கும் அப்படி ஒரு உழைப்பைகொடுத்திருப்பார். பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் பேசும் பாலச்சந்தர் கதாபாத்திரங்கள் போல ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்த நாவலிலும் பேசுவது போல் எனக்கு தோன்றிற்று. பாலச்சந்தர் படம் போன்றே இந்த நாவலை பிளாக் அண்ட் ஒயிட்டில் காட்சிப்படுத்திக்கொண்டேன்.

ஒவ்வொரு பக்கத்திலும் வசனநடை, எதுகை மோனை கொண்ட சொற்கள், ஏராளமான கற்பனை நிறைந்த உவமைகள், நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொற்கள். அப்பப்பா!! தி.ஜா,  தி.ஜாதான். கோபாலி, அம்மணி, மரகதம், பச்சையப்பன், ப்ரூஸ், கண்டு மாமா, அம்மணி பெரியம்மா, பெரியப்பா இப்படி ஒவ்வொன்றும் மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு கதாபாத்திரத்தை ஒரு வாசகனுக்கு கடத்திவிட முடியும் என்றால் நிச்சயமாக அந்த நாவல் நல்ல நாவல் தானே.

தி.ஜா போன்ற பெரிய எழுத்தாளர்களுக்கு, ஜாம்பவான்களுக்கு விமர்சனம் சொல்ல எனக்கு தகுதி இருக்கிறதா என்றால் தெரியவில்லை. மாறாக ஒரு வாசகனாக ஒரு எழுத்தாளன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கதையும் விமர்சிக்கப்படும் போது அந்த நாவல் அந்தக் கதை இன்னும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் சென்றடையும் என்றால் நான் செய்யும் விமர்சனம் தகுதிக்குரியதே!!!

பல்வேறு பதிப்பகங்கள் இந்த நாவலை பதிப்பித்திருக்கிறது. காலச்சுவட்டில் கொஞ்சம் நல்ல பிரண்டாக இருப்பதைப் பார்த்தேன் வாங்கிப் படியுங்கள்.

ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு பெண்ணுக்கு உங்களால் எந்த வகையிலும் துன்பம் நேராமல் இருந்தால், கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சியை அவர்களுக்கு உங்களால் கொடுக்க முடியுமென்றால், அவர்களுடைய சுதந்திரத்திற்கு எவ்விதத்திலும் நீங்கள் தடையாக இல்லாமல் இருந்தால் நிச்சயம் ஒரு மரப்பசு தேவையில்லை.

ஒற்றை வரியில் மரப்பசு பற்றி சொல்ல வேண்டும் என்றால் அம்மணி போன்றே ஒரு புன்சிரிப்போடு இந்த விமர்சனத்தை முடிக்கிறேன்.

#இந்த_ஆண்டில்_இதுவரை_4
#விமர்சனம்

சனி, 2 பிப்ரவரி, 2019

பெயரற்றது


சமீபத்தில் படித்து முடித்திருக்கும் புத்தகம் திருமிகு சயந்தன் அவர்கள் எழுதிய "பெயரற்றது". இதில் மொத்தம் 8 சிறுகதையில் இருக்கின்றன. அனைத்து சிறுகதைகளுமே ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வின் முரண்களையும் அவர்கள் படும் துன்பத்தையும் வேதனைகளையும் சொல்வதாக இருக்கிறது. 


இன்னும் கூடுதலாக ஈழத்தின் நடையிலேயே   இருப்பது புத்தகத்திற்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமைகிறது. மாறாக சில சிறுகதைகளில் சொல்லப்படக்கூடிய வார்த்தைகள் எனக்கு கொஞ்சம் புரியாமல் இருந்தது அது கதையை விட்டு என்னை வெளியே நடத்திச் சென்றுவிட்டது.

 இருக்கும் 8 கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதைகள் சின்ராசு மாமா கதை மற்றும் 90 சுவிஸ் பிராங்குகள் இரண்டு கதைகளுமே சிறிது நேரம் என்னை மற்ற வேலைகளை செய்ய விடாமல் செய்தது அதிலும் சின்ராசு மாமா கதையில் வரும் அந்த குழந்தையின் சடலம் கடலில் மிதப்பது போன்ற ஒரு சொல்லாடலில் என்னையும் மீறி கண்ணீர் வடித்தேன்.

இதில் ஈழத்தில் இருக்கக்கூடிய மக்களின் வாழ்க்கை அங்கு விடுதலைப்புலிகளின் செயல்கள் அங்கே இருக்கக்கூடிய ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் அது அப்பாவி மக்களை எப்படி அங்கிருந்து புலம் பெயர செய்கிறது என்பதை ஒவ்வொரு கதையிலும் மிகவும் விரிவாகவும் அதேசமயம் மீண்டும் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிவந்து விடமாட்டோமா என்ற ஏக்கத்தை  அழுத்தமாக எழுத்தாளர்  கதைகளில் படைத்துள்ளார்.
இன்னொரு முறை வாசித்தால் மட்டுமே எனக்கு மேலும் இதிலிருந்து கூடிய கதைகள் விளங்கும் என்று நினைக்கிறேன். வெளியிட்டு இருப்பது தமிழினி பதிப்பகம் விலை ரூபாய் 90.

இந்த புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய Devatha Tamil அம்மாவிற்கு மகனின் நன்றிகள்...

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...