ஞாயிறு, 31 மே, 2020

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி


அஞ்ஞாடி!

இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என் மனதில் என்றும் நிறைந்திருக்கும் திருமிகு. குருநாதசுந்தரம் அய்யா  அவர்கள். அவர் ஒருமுறை வீதி கலைஇலக்கிய கூட்டத்தில் இந்த நூலினை ஆய்வு செய்து விமர்சனம் செய்தார். அவரது விமர்சனம் உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. ஆனால் எனக்கு புத்தகம் கிடைக்கவில்லை. இது நடந்தது 2016 ஆம் ஆண்டு.

அப்போதிருந்து ஒவ்வொரு புத்தக கடைக்கு சென்றாலும் இந்த புத்தகத்தை தேடாத நாளில்லை. எனக்கு அது கிடைக்கவேயில்லை. பொன்வாசி அண்ணன் அவர்கள் இந்த நூலினை எனக்கு வாங்கி தருவதாக சொல்லியிருந்தார். அவரது கைக்கும் நூல் அகப்படவில்லை. இறுதியாக  தங்கை ஹபிலா அவர்களிடம் கடந்த ஜனவரியில் சென்னை புத்தக காட்சிக்கு செல்லும் போது இந்த நூலினை கேட்டேன். நூல் அகப்பட்டது. இதை மிக சாதுர்யமாக அதிக தள்ளுபடியுடன் வாங்கித்தந்த ஹபி சார் அவர்களுக்கும் எனது நன்றிகள். அஞ்ஞாடி!

அஞ்ஞாடி! முதலில் என்னை கவர்ந்தது இந்த பெயர்தான். “அஞ்ஞாடி” என்றால் என்ன? பெரும் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தேன். இந்த விமர்சனத்தில்கூட அதன் விளக்கத்தை நான் சொல்லவேண்டாமென நினைக்கிறன். ( கண்டிப்பாக உங்களுக்கு தெரியேண்டுமெனில் என்னை தனிபதிவில் அழைக்கவும், தெரிந்தவர்கள் அமைதி காக்கவும்) ஒரு பத்து தலைமுறை வரலாற்றை தன்னுள்ளே கொண்டிருகிறது இந்நூல். 

ஆண்டி மற்றும் மாரி இந்த இரண்டு கதாபாத்திரங்களுடன் துவங்குகிறது கதை. இருவரும் வெவ்வேறு குடியில் பிறந்தவர்கள். இருவருக்கும் உண்டான நட்பு அய்யயோ நம்மால் இந்த இரண்டு கதாபதிரங்களையும் விட்டு வெளிவரவே முடியாது. சிறுவர்களாக இருந்து பெரியவர்களாகி, குடும்பஸ்தர்களாக வளர்ந்து மகன் மகள் பேரன் பேத்தி கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தி அவர்களது பிள்ளைகள் வரை நீள்கிறது நாவல். தென் தமிழகம் எப்பொழுதுமே வாழ்வியலை நமக்கு வேறுமாதிரியாக சொல்லித்தருகிறது. அஞ்ஞாடி அந்த காலத்தில் வாழ்ந்த எதார்த்தமான மனிதர்களை மிக எளிமையாக நமக்குள்ளே கடத்துகிறது.

ஆண்டி கருப்பியின் வாழ்வு என்பது நாம் ஒவ்வொருநாளும்  வாழ ஆசைபடும் வாழ்வு. நம்முடைய வீடுகளில் வாழ்ந்த பாட்டனும் பாட்டியும், பூட்டனும் பூட்டியும் கூட இப்படி வாழ்ந்தவர்கள்தாம். ஆண்டிக்கும்  கருப்பிக்கும் இருக்கும் காதலையும் பாசத்தையும் படிக்கப்படிக்க ஆனந்த கண்ணீர் நமக்கு நிச்சயம் வந்தே தீரும். ஆண்டி ஒவ்வொரு முறையும் ஏம்பிளி கருப்பி! எனும்போதெல்லாம், கருப்பி அவரை ஏ இவனே! என்று அழைக்கும்போதெல்லாம் ஐயோ அந்த அன்பை சொல்ல வார்த்தைகளே இல்லை. எவ்வளவு அன்பு அவர்களுக்குள். “கண்ணின் கடைப்பார்வை கன்னியர்கள் காட்டிவிட்டால் மண்ணில் குமரற்கு மாமலையும் ஓர்கடுகாம்!”. இந்த வார்த்தையை முதிந்த வயதிலும் காப்பற்றியிருக்கின்றனர் இருவரும். ஒரு குடும்பத்தில் பெண்  எவ்வளவு முக்கியமானவள் என்பதை இந்த நூலில் பல இடங்களில் நாம் உணர முடியும். ஆண்டி சுனங்கும்போதேல்லாம் அட நா இருக்கேன் வா என்று தைரியப்படுத்தும் கருப்பி போன்ற பெண்கள்தான் நிஜ நாயகிகள். 

அஞ்ஞாடி படித்த பிறகு நிச்சயமாக உங்கள் வாழ்கை முறை சிறிதேனும் மாறும். ஆண்டி மற்றும் கருப்பின் மனவோட்டத்தினை புரிந்துகொண்டால் அன்பு, பாசம், நட்பு, உழைப்பு இத்தனையையும் நாம் கற்றுக்கொள்ள முடியும். அஞ்ஞாடி நமக்கு அன்பையும், மனித விழுமியங்களையும் கற்றுத்தருகிறது. கடந்த 200 ஆண்டுகளில் நம்முடைய குணமும், மனமும் எந்தளவுக்கு மாற்றமடைதிருக்கிறது என்பதை நன்றாக உணர முடிகிறது.

மாரி-அனந்தி இந்த இருவருக்குமான அன்பும் இதேபோல் தான். மாரி வெள்ளந்தியான மனிதராக வலம் வருகிறார். வெளுப்புத்துரையில் அவர் பாடும் பாட்டும் அவர் சொல்லும் கதைகளும் எப்போதும் மனதில் நிற்கும் ரகம். எல்லா சாதிகளும் ஒரு ஊரில் வாழ்ந்தாலும் எல்லோருக்கும் ஒற்றுமையை கற்றுத்தரும் ஊராக நம்மை உணர வைக்கிறது கலிங்கலூரணி.ஆனால் கழுகுமலையின் நிலைமையே வேறு.

ஆம்! கழுகுமலை தான் சாதியத்தை முழுமையாக நமக்கு கற்றுத்தரும் ஊராக இருக்கிறது. கரிசலில் நாடார்களின் கொடுமையான வாழ்கையை முழுவதுமாக விளங்க வைப்பதாக இருக்கிறது. ஆரம்பத்தில் சாணார்கள் என்று சொல்லபட்ட பனையேறிகள் தங்களுடைய கடினமான உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முதலாளிகளாக உயர்கிறார்கள். அவர்களுடய ஒரே கோரிக்கை  கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடுவதுதான். அதுபோக கல்யாணம் நடக்கும் சமயங்களில் பட்டின பிரவேசம் போக வேண்டும். இதற்கான பல போராட்டங்கள் நடக்கிறது. முதல் படியாக சாணார் என்பதை நாடாராக மாற்றுகிறார்கள். மேல்சாதிகாரர்கள் எந்த சூழ்நிலையிலும் அவர்களை உள்ளே நுழையவிடவில்லை. நாடார்கள் தங்களுடய உரிமைகளை பெற முடியாமல் தவிக்கும்போது இந்த நிலையை மாற்ற கிருஸ்தவ மதத்திற்கு மாறுகிறார்கள். அப்படி மாறிய பிறகும் அவர்களுடய வாழ்கை மாறவில்லை. 

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வில் எடுக்கும் மிகச்சிறிய முடிவுகள் மிகப்பெரும் விளைவுகள் ஏற்படுத்தியிருக்கிறது. இதுதான் வரலாறு. இது எவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தும். நாம் காண முடியாத தென்தமிழக வரலாற்றை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் பூமணி அய்யா. மறவர்களுக்கும் நாடார்களுக்கும் நடந்த போராட்டங்கள் பற்றி நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள முடிகிறது. இரு சமூகங்களிலும் எத்தனை உயிர்கள் போயிருக்கிறது என்பதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.  இந்த கால கட்டத்தில் இந்தியா ஆங்கிலேய ஆட்சியின் கீழே இருந்திருக்கிறது. எட்டப்ப மகாராஜாவின் வம்சாவழிகளின் கீழ்தான் அந்த பகுதியை ஆட்சி செய்திருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு நாம் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் நிலைமையிலும் இந்த சாதிய அடுக்குகளின் படிநிலைகள் எவ்வாறு மாற்றமடைந்திருக்கிறது என்பதை நீங்களே புரிந்துகொள்ள வேண்டியது.

இதுபோக இந்த நூல் உண்மை கலந்த புனைவு. நூலில் நம்முடைய வரலாறில் ஊர்காவல் தெய்வங்களாக எப்படி உண்மையில் வாழ்ந்த மனிதர்கள் உருமாறியிருக்கிரார்ர்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, எட்டப்ப மன்னர்களின் வரலாறுகள் இடம்பெற்றிருக்கிறது. நாடார்கள் மற்றும் மறவர்களின் போராட்டங்களில் இவர்களின் தாக்கம் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு கீழ் வந்தபிறகு கோர்ட் நடவடிக்கைகளின் சாதக பாதகங்களையும் உணர்ந்துகொள்ள முடியும். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைகளின்போது இந்து முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தை படிக்ககூட முடியவில்லை. நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கையும் நம்மை வியக்க வைக்கிறது.  சமீபத்தில் சோ. தர்மன் அய்யா அவர்கள் எழுதிய சூழ் கூட இந்த மாதிரியான கதைகளத்தை கொண்டதுதான். 

இந்த நாவலுக்காக பூமணி அய்யா அவர்களின் உழைப்பு என்பது அபாரமானது. கிட்டத்தட்ட ஏழு வருட உழைப்பை கொட்டியிருக்கிறார். இதற்காக பல ஆவணங்களை தேடிப்பிடித்து 2000 பக்கங்களை சேகரித்து படித்ததாக ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார்.  இதை படிக்கும்போது பெரும் ஆச்சர்யமே அவரது கரிசல் மொழிதான். மிகவும் எதார்த்தமான எழுத்து. இதில் வரும் தெம்மாங்கு பாடல்களை மெட்டுபோட்டு பாட ஆசை வருகிறது. கரிசல் இலக்கியம் என்பதெல்லாம் இல்லை இனி இந்த பக்கத்தில் உள்ள இலக்கியங்களை தெந்தமிழக வரலாறு எண்டு கூறுங்கள் என்கிறார். 

எது எப்படியோ மனதுக்கு நிறைவான ஒரு நாவலை படித்த மகிழ்ச்சியில் இந்த வாசிப்பனுபவத்தை எழுதுகிறேன். ஒரு பக்கம் இதை நாடார் வரலாறு எனலாம். இன்னொரு பக்கம் இந்திய வரலாற்றில் ஏற்பட்ட ஆங்கிலேய காலனி ஆதிக்கம் கிறிஸ்தவத்தை எப்படி இங்கு பரப்பியது என்பதையும் அறியலாம். மதமாற்றம் ஒரு மிகப்பெரும் விளைவையும் மாற்றதையும் தமிழக மற்றும்  இந்திய மக்களின் வாழ்க்கையில்  மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறியலாம்.

எல்லா மதங்களும் அன்பை போதிக்கிறது. பகவத்கீதையும், புனித குர்ஆனும், புனித பைபிளும் மனிதர்களுக்கு விழுமியங்களையும் அன்பையும் போதிக்கிறது. போதனைகள் நாம் வழிமாறிப் போகும்போது நம்மை செம்மைபடுத்தி நல்வழியில் நடத்தி செல்லவே என்பதை நாம் அறிவோம். ஆனால் நாம் போதனைகளை நடைமுறைப்படுத்த முனையும்போது ஏற்படும் எதார்த்த சிக்கல்களில் முடிவெடுக்க முடியாமல் தவிப்போம். அதுதான் பிற்பாடு வரலாறாக மாறுகிறது, அஞ்ஞாடியும் நமக்கு அன்பைத்தான் போதிக்கிறது. மற்ற மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள போதிக்கிறது. அந்த போதனையை ஏற்போம். அதன்வழி நடக்க முயற்சி செய்வோம். 

இன்னும் ஆயிரம் பக்கம் வேண்டுமானாலும் இதைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம்!

அஞ்ஞாடி – அன்பின் போதனை 

நூல் : அஞ்ஞாடி
ஆசிரியர் : பூமணி 
வெளியீடு : க்ரியா பதிப்பகம் 
விலை : ரூ.1000-

விமர்சனம் :
ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன்,
புதுக்கோட்டை.

ஞாயிறு, 17 மே, 2020

நூல் விமர்சனம் - வேள்பாரி

நன்றி கீதாம்மா!!!

பறம்பு – பாரி = நமக்கான வாழ்க்கை முறை

கிட்டத்தட்ட 2018 ஆண்டுகளுக்கு பிறகும் மனிதர்களால் அவன் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறான். அவன் வள்ளல் தன்மையையும் வீரத்தையும் பற்றி கதைகள் சொல்லப்படுக்கொண்டே இருக்கிறது. அழிவில்லா புகழ் கொண்டவன் பாரி என்பதற்கு இந்த நாவலும் ஒரு சான்று. பாரியை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் அவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன், முல்லைக்குத் தேர் கொடுத்தவன், இன்னும் கூடுதலாக அவனுக்கு இரு மகள்கள் அங்கவை சங்கவை என்பதும்தான்.

நாம் அறியவேண்டிய பாரியை பற்றியும் அவனுடைய அறம், இயற்கையின் மீது அவனுக்கிருந்த அறிவு, அனுபவம், அதன் மீது அவன் கொண்ட காதல், தலைவனுக்கான தகுதி, அதையும் மீறி பறம்பு மக்கள்மேல் அவன் கொண்ட பாசம், நிலத்தின் மீது அவனுக்கிருந்த பற்று, எதையும் எதிர்பாக்காத அவன் உள்ளம், உலகத்துக்கே அவன் சொல்லித்தந்த ஈகை, தன் துணையின் மேல் அவனுக்கிருந்த காதல், தன் முன்னோர்கள் மீது அவனுக்கிருந்த மதிப்பு இதையெல்லாம் விட கூடுதலாக கற்றறிந்த புலவவர்களுக்கு அவன் தந்த மரியாதை, இதையெல்லாம் இந்த தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் அறிய அதன் வழி நடக்க சு. வெங்கடேசன் அவர்கள் தன் உழைப்பைக் கொட்டி கண்டெடுத்த அறிய புதையல்தான் வீரயுக நாயகன் வேள்பாரி.

இதில் எதை சொல்வது எதை விடுப்பது. எதையுமே விட்டுவிட முடியாதபடி பெரும் நெருக்கடி நமக்கு. பாரியின் கதை கபிலரிலிருந்து தொடங்குகிறது. பறம்பின் மீது ஏறியதிலிருந்து பாரியும் பறம்பும் கபிலர் வாயிலாக நம்மை பறம்புக்குள்ளே கூட்டிச்செல்கிறது. அப்போது நாம் அடையும் பிரம்மிப்பிற்கு நிகர் வேறெதுவும் இல்லை. பாரி நம்மை கைபிடித்து அழைத்து சென்று ஒவ்வொரு செடியையும், இலைகளையும், மரம், பட்டை, வேர், பூ, காய், கனி, காட்டின் தட்பவெட்பம், பள்ளம், மேடு, குகை, காதல்,வீரம், என எல்லாவற்றையும் சொல்லிகொடுக்கிறார்.

மகிழ்ச்சியோடு எப்படி வாழ்வது என்பதை பறம்பு மக்களிடம்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கதையில் வரும் ஒவ்வொரு இணையும் எது மகிழ்ச்சி என்பதை நமக்கு சொல்லித்தருகிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல, என் பாட்டியை என் பாட்டன் எவ்வாறு காதலித்தான் என்பதை நான் அவன் மூலமாகத்தானே கற்றுக்கொள்ள முடியும். வெறும் ஆடம்பரத்திலும், ஆடை அணிகலன்களிலும் காதல் பிறந்துவிடுவதில்லை. அது அன்பு செய்வதில் இருக்கிறது என்பதை வெங்கடேசன் அவர்கள் அவரின் அழகிய மொழி நடையில் வார்த்து எடுத்திருக்கிறார். முருகன்-வள்ளி, பாரி - ஆதினி, நீலன்- மயிலா, உதிரன்- அங்கவை, சூளிவேல்- தூதுவை இப்படி எண்ணற்ற இணையர்கள் அடங்கிய கதைகள் இதில் இருக்கின்றன.

பொதுவாக வெக்கை பூமியில் வாழும் மனிதர்களுக்கு இன்றுவரை மலையையும் அதன் கூறுகளையும் அறிந்துகொள்வதில் ஆர்வம் குறையவே இல்லை என்பதே நிதர்சனம். அது மூவேந்தர்களுக்கும் இல்லாமல் இருந்திருக்குமா என்ன? அந்த பேராசையின் விளைவுகளை இன்றுவரை மறைமுகமாக நாம் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். வேந்தர்கள் யாரும் அப்பாவிகளுக்கு நிகழப்போகும் விளைவுகளை பற்றி கவலைகொள்வதே இல்லை. அவர்களுக்கு அதிகாரம் வேண்டுமெனில் எந்த குலத்தை அழிக்கவும் அவர்கள் அறம் தவற தயாராக இருந்திருக்கிறார்கள். புகழ் போதை அவர்களை உச்சிக்கு கொண்டுசெல்லும்போது தன்னிலை இழந்திருக்கிறார்கள். ஆனால் பாரி எந்த இடத்திலும் அறம் தவறவில்லை. அவன் உலகிற்கு எடுத்துக்கட்டாக இருந்திருக்கிறான். அவன் நம்மை பொறுத்தவரை நிஜ பாகுபலி. தலைவன் சரியாக இருந்தால் மக்கள் எந்த நிலையிலும் அவனை எவரையும் நெருங்க விட மாட்டார்கள் என்பதற்கும் பறம்பு மக்களே சாட்சி. அதற்கு உதாரணமாக தேக்கன், முடியன், பழையன், இரவாதன், நீலன், வாரிக்கையன், திரையன் என பறம்பின் ஒவ்வொருவரையும் நம் கண்முன்னே நிறுத்துகிறார் வெங்கடேசன். இவர்கள் எல்லோருடைய பாதுகாப்பையும் உறுதி செய்கிறார் பாரி. அறம் தவறாத ஒருவனால் எதையும் செய்ய முடியும் என்பதே கதையின் முடிவு.

அறத்திலிருந்து விலகாத திசைவேழர், தியாகம் செய்த பொற்சுவை, துரோகம் இழைத்த ஈக்கையன், சத்தியம் மறந்த மைய்யூர் கிழார், மேலும் இதில்வரும் கருக்கை வாணன், திதியன், சுகமதி, அலவன், கீதானி, முறியன் ஆசான், காலம்பன், முசுகுந்தர் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு சொல்லித்தருவதே வாழ்க்கைப் பாடம். பெண்மையும் அவர்கள் வீரமும் இதில் போற்றப்படுவது சிறப்பு.

இதில் எனக்கு முரண்பட்ட கேள்விகளும் ஏராளம் இருக்கிறது. எழுத்தாளர் அவர்கள் சில விஷயங்களில் சமரசம் செய்தி கதையின் போக்கை மாற்றிவிடாரோ என்று தோன்றுகிறது. எது எப்படியாயினும் அவரின் இந்த பெரும் உழைப்பிற்கு எதை தந்தும் ஈடுகட்டமுடியாது. இது நிச்சயம் பரவலாக படிக்கப்படவேண்டும். தமிழனின் மொழியும் இலக்கியமும் சாகாது வாழ இது போன்ற படைப்புகள் நிறைய தேவை.

வேள்பாரியில் என்னை கவர்ந்த வாசகங்கள் :
1. ஆண் அவசரத்தின் அடையாளம், பெண் பக்குவத்தின் அடையாளம்.
2. யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு.
3. இயல்புதான் ஒன்றன் குணத்தை தீர்மானிக்க கூடியது.
4.காதல் சம்பந்தப்பட்டவர்களின் சாமர்த்தியத்தால்தான் கைகூடும்.
5. தீமையை கணப்பொழுதில் நன்மையாய் மாற்ற முடிகிற வல்லமை வார்த்தைகளுக்கு உண்டு.
6.நாடென்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம்
7. உணவு என்பது சேகரிப்பு தானே தவிர உற்பத்தி அல்ல.
8. குழந்தைகளிடம் விட்டுக் கொடுக்கும்போதும் தோற்கும் போதும் தான் ஓர் ஆண் தாய்மையை அனுபவிக்கிறான்.
9. இயற்கை வழங்குகிறது நாங்கள் வாழ்கிறோம். இடையில் விற்கவும் வாங்கவும் நாம் யார்?
10. சொல் சுடும் போது சொல்லைச் சுடுவான் புலவன்.
11. ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறார். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.
12. உரத்து சொல்லப்படுவதை விட காதோடு காதாக பேசும் கதைக்கு வயது அதிகம்.
13. இந்த கணமும் நீ தாக்கப்படலாம் ஆனால் அதற்கு முந்தைய கணம் உன்னுடையது அதில் நீ கையறுநிலையில் நின்றால் உன் குலம் ஆறோடு போகும்.
14. கடித்து இழுக்க விலங்குகளுக்கு பல் இருப்பது போல் மனிதனுக்கு கதை. கதைகள்தான் நல்லவர்களுக்கான கடைசி நம்பிக்கை.
15. பெரும் உண்மைகள் எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்துத்தான் வெளிவருகின்றன.

நம் முன்னோர்கள் நமக்கு உருவாக்கித்தந்த வாழ்க்கை முறையை மறந்து வாழ்கிறோம். கற்றவர்கள் ஆங்காங்கே அவமதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் கற்றவர்களுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பது சொலவடையாகிவிடக் கூடாது. கபிலரும், ஒளவையும் இன்னபிற அறிஞர் பெருமக்களும் இதையெல்லாம் எழுதி வைக்காமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும். எனவே தான் கபிலரை பெரும்புலவர் என்கிறோம். கற்றரிந்தவர்களை போற்றி வளர்க்காத எந்த சமூகமும் அழிந்தொழியும். அப்படி இன்றைய எழுத்தாளர்களையும் நாம் போற்றி பேணி பாதுகாக்க வேண்டும். ஆட்சியாளர்கள் அறம் உணர்த்து ஆட்சி செய்ய வேண்டும். ஏழை மக்கள் நல்வாழ்க்கை வாழ வேண்டும். அப்படி வாழ்தால் பாரி போல் என்றும் இரவாப் புகழுடன் இருப்போம் என்பதில் ஐயமில்லை!

வேள்பாரி – நமக்கான வாழ்க்கை முறை

நூல் : வீரயுக நாயகன் வேள்பாரி (இரண்டு பாகங்கள் )
ஆசிரியர் : சு.வெங்கடேசன்
விலை : 1350/-
வெளியீடு : ஆனந்த விகடன்

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...