ஞாயிறு, 31 மே, 2020

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி


அஞ்ஞாடி!

இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என் மனதில் என்றும் நிறைந்திருக்கும் திருமிகு. குருநாதசுந்தரம் அய்யா  அவர்கள். அவர் ஒருமுறை வீதி கலைஇலக்கிய கூட்டத்தில் இந்த நூலினை ஆய்வு செய்து விமர்சனம் செய்தார். அவரது விமர்சனம் உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. ஆனால் எனக்கு புத்தகம் கிடைக்கவில்லை. இது நடந்தது 2016 ஆம் ஆண்டு.

அப்போதிருந்து ஒவ்வொரு புத்தக கடைக்கு சென்றாலும் இந்த புத்தகத்தை தேடாத நாளில்லை. எனக்கு அது கிடைக்கவேயில்லை. பொன்வாசி அண்ணன் அவர்கள் இந்த நூலினை எனக்கு வாங்கி தருவதாக சொல்லியிருந்தார். அவரது கைக்கும் நூல் அகப்படவில்லை. இறுதியாக  தங்கை ஹபிலா அவர்களிடம் கடந்த ஜனவரியில் சென்னை புத்தக காட்சிக்கு செல்லும் போது இந்த நூலினை கேட்டேன். நூல் அகப்பட்டது. இதை மிக சாதுர்யமாக அதிக தள்ளுபடியுடன் வாங்கித்தந்த ஹபி சார் அவர்களுக்கும் எனது நன்றிகள். அஞ்ஞாடி!

அஞ்ஞாடி! முதலில் என்னை கவர்ந்தது இந்த பெயர்தான். “அஞ்ஞாடி” என்றால் என்ன? பெரும் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தேன். இந்த விமர்சனத்தில்கூட அதன் விளக்கத்தை நான் சொல்லவேண்டாமென நினைக்கிறன். ( கண்டிப்பாக உங்களுக்கு தெரியேண்டுமெனில் என்னை தனிபதிவில் அழைக்கவும், தெரிந்தவர்கள் அமைதி காக்கவும்) ஒரு பத்து தலைமுறை வரலாற்றை தன்னுள்ளே கொண்டிருகிறது இந்நூல். 

ஆண்டி மற்றும் மாரி இந்த இரண்டு கதாபாத்திரங்களுடன் துவங்குகிறது கதை. இருவரும் வெவ்வேறு குடியில் பிறந்தவர்கள். இருவருக்கும் உண்டான நட்பு அய்யயோ நம்மால் இந்த இரண்டு கதாபதிரங்களையும் விட்டு வெளிவரவே முடியாது. சிறுவர்களாக இருந்து பெரியவர்களாகி, குடும்பஸ்தர்களாக வளர்ந்து மகன் மகள் பேரன் பேத்தி கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தி அவர்களது பிள்ளைகள் வரை நீள்கிறது நாவல். தென் தமிழகம் எப்பொழுதுமே வாழ்வியலை நமக்கு வேறுமாதிரியாக சொல்லித்தருகிறது. அஞ்ஞாடி அந்த காலத்தில் வாழ்ந்த எதார்த்தமான மனிதர்களை மிக எளிமையாக நமக்குள்ளே கடத்துகிறது.

ஆண்டி கருப்பியின் வாழ்வு என்பது நாம் ஒவ்வொருநாளும்  வாழ ஆசைபடும் வாழ்வு. நம்முடைய வீடுகளில் வாழ்ந்த பாட்டனும் பாட்டியும், பூட்டனும் பூட்டியும் கூட இப்படி வாழ்ந்தவர்கள்தாம். ஆண்டிக்கும்  கருப்பிக்கும் இருக்கும் காதலையும் பாசத்தையும் படிக்கப்படிக்க ஆனந்த கண்ணீர் நமக்கு நிச்சயம் வந்தே தீரும். ஆண்டி ஒவ்வொரு முறையும் ஏம்பிளி கருப்பி! எனும்போதெல்லாம், கருப்பி அவரை ஏ இவனே! என்று அழைக்கும்போதெல்லாம் ஐயோ அந்த அன்பை சொல்ல வார்த்தைகளே இல்லை. எவ்வளவு அன்பு அவர்களுக்குள். “கண்ணின் கடைப்பார்வை கன்னியர்கள் காட்டிவிட்டால் மண்ணில் குமரற்கு மாமலையும் ஓர்கடுகாம்!”. இந்த வார்த்தையை முதிந்த வயதிலும் காப்பற்றியிருக்கின்றனர் இருவரும். ஒரு குடும்பத்தில் பெண்  எவ்வளவு முக்கியமானவள் என்பதை இந்த நூலில் பல இடங்களில் நாம் உணர முடியும். ஆண்டி சுனங்கும்போதேல்லாம் அட நா இருக்கேன் வா என்று தைரியப்படுத்தும் கருப்பி போன்ற பெண்கள்தான் நிஜ நாயகிகள். 

அஞ்ஞாடி படித்த பிறகு நிச்சயமாக உங்கள் வாழ்கை முறை சிறிதேனும் மாறும். ஆண்டி மற்றும் கருப்பின் மனவோட்டத்தினை புரிந்துகொண்டால் அன்பு, பாசம், நட்பு, உழைப்பு இத்தனையையும் நாம் கற்றுக்கொள்ள முடியும். அஞ்ஞாடி நமக்கு அன்பையும், மனித விழுமியங்களையும் கற்றுத்தருகிறது. கடந்த 200 ஆண்டுகளில் நம்முடைய குணமும், மனமும் எந்தளவுக்கு மாற்றமடைதிருக்கிறது என்பதை நன்றாக உணர முடிகிறது.

மாரி-அனந்தி இந்த இருவருக்குமான அன்பும் இதேபோல் தான். மாரி வெள்ளந்தியான மனிதராக வலம் வருகிறார். வெளுப்புத்துரையில் அவர் பாடும் பாட்டும் அவர் சொல்லும் கதைகளும் எப்போதும் மனதில் நிற்கும் ரகம். எல்லா சாதிகளும் ஒரு ஊரில் வாழ்ந்தாலும் எல்லோருக்கும் ஒற்றுமையை கற்றுத்தரும் ஊராக நம்மை உணர வைக்கிறது கலிங்கலூரணி.ஆனால் கழுகுமலையின் நிலைமையே வேறு.

ஆம்! கழுகுமலை தான் சாதியத்தை முழுமையாக நமக்கு கற்றுத்தரும் ஊராக இருக்கிறது. கரிசலில் நாடார்களின் கொடுமையான வாழ்கையை முழுவதுமாக விளங்க வைப்பதாக இருக்கிறது. ஆரம்பத்தில் சாணார்கள் என்று சொல்லபட்ட பனையேறிகள் தங்களுடைய கடினமான உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முதலாளிகளாக உயர்கிறார்கள். அவர்களுடய ஒரே கோரிக்கை  கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடுவதுதான். அதுபோக கல்யாணம் நடக்கும் சமயங்களில் பட்டின பிரவேசம் போக வேண்டும். இதற்கான பல போராட்டங்கள் நடக்கிறது. முதல் படியாக சாணார் என்பதை நாடாராக மாற்றுகிறார்கள். மேல்சாதிகாரர்கள் எந்த சூழ்நிலையிலும் அவர்களை உள்ளே நுழையவிடவில்லை. நாடார்கள் தங்களுடய உரிமைகளை பெற முடியாமல் தவிக்கும்போது இந்த நிலையை மாற்ற கிருஸ்தவ மதத்திற்கு மாறுகிறார்கள். அப்படி மாறிய பிறகும் அவர்களுடய வாழ்கை மாறவில்லை. 

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வில் எடுக்கும் மிகச்சிறிய முடிவுகள் மிகப்பெரும் விளைவுகள் ஏற்படுத்தியிருக்கிறது. இதுதான் வரலாறு. இது எவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தும். நாம் காண முடியாத தென்தமிழக வரலாற்றை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் பூமணி அய்யா. மறவர்களுக்கும் நாடார்களுக்கும் நடந்த போராட்டங்கள் பற்றி நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள முடிகிறது. இரு சமூகங்களிலும் எத்தனை உயிர்கள் போயிருக்கிறது என்பதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.  இந்த கால கட்டத்தில் இந்தியா ஆங்கிலேய ஆட்சியின் கீழே இருந்திருக்கிறது. எட்டப்ப மகாராஜாவின் வம்சாவழிகளின் கீழ்தான் அந்த பகுதியை ஆட்சி செய்திருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு நாம் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் நிலைமையிலும் இந்த சாதிய அடுக்குகளின் படிநிலைகள் எவ்வாறு மாற்றமடைந்திருக்கிறது என்பதை நீங்களே புரிந்துகொள்ள வேண்டியது.

இதுபோக இந்த நூல் உண்மை கலந்த புனைவு. நூலில் நம்முடைய வரலாறில் ஊர்காவல் தெய்வங்களாக எப்படி உண்மையில் வாழ்ந்த மனிதர்கள் உருமாறியிருக்கிரார்ர்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, எட்டப்ப மன்னர்களின் வரலாறுகள் இடம்பெற்றிருக்கிறது. நாடார்கள் மற்றும் மறவர்களின் போராட்டங்களில் இவர்களின் தாக்கம் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு கீழ் வந்தபிறகு கோர்ட் நடவடிக்கைகளின் சாதக பாதகங்களையும் உணர்ந்துகொள்ள முடியும். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைகளின்போது இந்து முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தை படிக்ககூட முடியவில்லை. நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கையும் நம்மை வியக்க வைக்கிறது.  சமீபத்தில் சோ. தர்மன் அய்யா அவர்கள் எழுதிய சூழ் கூட இந்த மாதிரியான கதைகளத்தை கொண்டதுதான். 

இந்த நாவலுக்காக பூமணி அய்யா அவர்களின் உழைப்பு என்பது அபாரமானது. கிட்டத்தட்ட ஏழு வருட உழைப்பை கொட்டியிருக்கிறார். இதற்காக பல ஆவணங்களை தேடிப்பிடித்து 2000 பக்கங்களை சேகரித்து படித்ததாக ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார்.  இதை படிக்கும்போது பெரும் ஆச்சர்யமே அவரது கரிசல் மொழிதான். மிகவும் எதார்த்தமான எழுத்து. இதில் வரும் தெம்மாங்கு பாடல்களை மெட்டுபோட்டு பாட ஆசை வருகிறது. கரிசல் இலக்கியம் என்பதெல்லாம் இல்லை இனி இந்த பக்கத்தில் உள்ள இலக்கியங்களை தெந்தமிழக வரலாறு எண்டு கூறுங்கள் என்கிறார். 

எது எப்படியோ மனதுக்கு நிறைவான ஒரு நாவலை படித்த மகிழ்ச்சியில் இந்த வாசிப்பனுபவத்தை எழுதுகிறேன். ஒரு பக்கம் இதை நாடார் வரலாறு எனலாம். இன்னொரு பக்கம் இந்திய வரலாற்றில் ஏற்பட்ட ஆங்கிலேய காலனி ஆதிக்கம் கிறிஸ்தவத்தை எப்படி இங்கு பரப்பியது என்பதையும் அறியலாம். மதமாற்றம் ஒரு மிகப்பெரும் விளைவையும் மாற்றதையும் தமிழக மற்றும்  இந்திய மக்களின் வாழ்க்கையில்  மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறியலாம்.

எல்லா மதங்களும் அன்பை போதிக்கிறது. பகவத்கீதையும், புனித குர்ஆனும், புனித பைபிளும் மனிதர்களுக்கு விழுமியங்களையும் அன்பையும் போதிக்கிறது. போதனைகள் நாம் வழிமாறிப் போகும்போது நம்மை செம்மைபடுத்தி நல்வழியில் நடத்தி செல்லவே என்பதை நாம் அறிவோம். ஆனால் நாம் போதனைகளை நடைமுறைப்படுத்த முனையும்போது ஏற்படும் எதார்த்த சிக்கல்களில் முடிவெடுக்க முடியாமல் தவிப்போம். அதுதான் பிற்பாடு வரலாறாக மாறுகிறது, அஞ்ஞாடியும் நமக்கு அன்பைத்தான் போதிக்கிறது. மற்ற மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள போதிக்கிறது. அந்த போதனையை ஏற்போம். அதன்வழி நடக்க முயற்சி செய்வோம். 

இன்னும் ஆயிரம் பக்கம் வேண்டுமானாலும் இதைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம்!

அஞ்ஞாடி – அன்பின் போதனை 

நூல் : அஞ்ஞாடி
ஆசிரியர் : பூமணி 
வெளியீடு : க்ரியா பதிப்பகம் 
விலை : ரூ.1000-

விமர்சனம் :
ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன்,
புதுக்கோட்டை.

ஞாயிறு, 17 மே, 2020

நூல் விமர்சனம் - வேள்பாரி

நன்றி கீதாம்மா!!!

பறம்பு – பாரி = நமக்கான வாழ்க்கை முறை

கிட்டத்தட்ட 2018 ஆண்டுகளுக்கு பிறகும் மனிதர்களால் அவன் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறான். அவன் வள்ளல் தன்மையையும் வீரத்தையும் பற்றி கதைகள் சொல்லப்படுக்கொண்டே இருக்கிறது. அழிவில்லா புகழ் கொண்டவன் பாரி என்பதற்கு இந்த நாவலும் ஒரு சான்று. பாரியை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் அவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன், முல்லைக்குத் தேர் கொடுத்தவன், இன்னும் கூடுதலாக அவனுக்கு இரு மகள்கள் அங்கவை சங்கவை என்பதும்தான்.

நாம் அறியவேண்டிய பாரியை பற்றியும் அவனுடைய அறம், இயற்கையின் மீது அவனுக்கிருந்த அறிவு, அனுபவம், அதன் மீது அவன் கொண்ட காதல், தலைவனுக்கான தகுதி, அதையும் மீறி பறம்பு மக்கள்மேல் அவன் கொண்ட பாசம், நிலத்தின் மீது அவனுக்கிருந்த பற்று, எதையும் எதிர்பாக்காத அவன் உள்ளம், உலகத்துக்கே அவன் சொல்லித்தந்த ஈகை, தன் துணையின் மேல் அவனுக்கிருந்த காதல், தன் முன்னோர்கள் மீது அவனுக்கிருந்த மதிப்பு இதையெல்லாம் விட கூடுதலாக கற்றறிந்த புலவவர்களுக்கு அவன் தந்த மரியாதை, இதையெல்லாம் இந்த தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் அறிய அதன் வழி நடக்க சு. வெங்கடேசன் அவர்கள் தன் உழைப்பைக் கொட்டி கண்டெடுத்த அறிய புதையல்தான் வீரயுக நாயகன் வேள்பாரி.

இதில் எதை சொல்வது எதை விடுப்பது. எதையுமே விட்டுவிட முடியாதபடி பெரும் நெருக்கடி நமக்கு. பாரியின் கதை கபிலரிலிருந்து தொடங்குகிறது. பறம்பின் மீது ஏறியதிலிருந்து பாரியும் பறம்பும் கபிலர் வாயிலாக நம்மை பறம்புக்குள்ளே கூட்டிச்செல்கிறது. அப்போது நாம் அடையும் பிரம்மிப்பிற்கு நிகர் வேறெதுவும் இல்லை. பாரி நம்மை கைபிடித்து அழைத்து சென்று ஒவ்வொரு செடியையும், இலைகளையும், மரம், பட்டை, வேர், பூ, காய், கனி, காட்டின் தட்பவெட்பம், பள்ளம், மேடு, குகை, காதல்,வீரம், என எல்லாவற்றையும் சொல்லிகொடுக்கிறார்.

மகிழ்ச்சியோடு எப்படி வாழ்வது என்பதை பறம்பு மக்களிடம்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கதையில் வரும் ஒவ்வொரு இணையும் எது மகிழ்ச்சி என்பதை நமக்கு சொல்லித்தருகிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல, என் பாட்டியை என் பாட்டன் எவ்வாறு காதலித்தான் என்பதை நான் அவன் மூலமாகத்தானே கற்றுக்கொள்ள முடியும். வெறும் ஆடம்பரத்திலும், ஆடை அணிகலன்களிலும் காதல் பிறந்துவிடுவதில்லை. அது அன்பு செய்வதில் இருக்கிறது என்பதை வெங்கடேசன் அவர்கள் அவரின் அழகிய மொழி நடையில் வார்த்து எடுத்திருக்கிறார். முருகன்-வள்ளி, பாரி - ஆதினி, நீலன்- மயிலா, உதிரன்- அங்கவை, சூளிவேல்- தூதுவை இப்படி எண்ணற்ற இணையர்கள் அடங்கிய கதைகள் இதில் இருக்கின்றன.

பொதுவாக வெக்கை பூமியில் வாழும் மனிதர்களுக்கு இன்றுவரை மலையையும் அதன் கூறுகளையும் அறிந்துகொள்வதில் ஆர்வம் குறையவே இல்லை என்பதே நிதர்சனம். அது மூவேந்தர்களுக்கும் இல்லாமல் இருந்திருக்குமா என்ன? அந்த பேராசையின் விளைவுகளை இன்றுவரை மறைமுகமாக நாம் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். வேந்தர்கள் யாரும் அப்பாவிகளுக்கு நிகழப்போகும் விளைவுகளை பற்றி கவலைகொள்வதே இல்லை. அவர்களுக்கு அதிகாரம் வேண்டுமெனில் எந்த குலத்தை அழிக்கவும் அவர்கள் அறம் தவற தயாராக இருந்திருக்கிறார்கள். புகழ் போதை அவர்களை உச்சிக்கு கொண்டுசெல்லும்போது தன்னிலை இழந்திருக்கிறார்கள். ஆனால் பாரி எந்த இடத்திலும் அறம் தவறவில்லை. அவன் உலகிற்கு எடுத்துக்கட்டாக இருந்திருக்கிறான். அவன் நம்மை பொறுத்தவரை நிஜ பாகுபலி. தலைவன் சரியாக இருந்தால் மக்கள் எந்த நிலையிலும் அவனை எவரையும் நெருங்க விட மாட்டார்கள் என்பதற்கும் பறம்பு மக்களே சாட்சி. அதற்கு உதாரணமாக தேக்கன், முடியன், பழையன், இரவாதன், நீலன், வாரிக்கையன், திரையன் என பறம்பின் ஒவ்வொருவரையும் நம் கண்முன்னே நிறுத்துகிறார் வெங்கடேசன். இவர்கள் எல்லோருடைய பாதுகாப்பையும் உறுதி செய்கிறார் பாரி. அறம் தவறாத ஒருவனால் எதையும் செய்ய முடியும் என்பதே கதையின் முடிவு.

அறத்திலிருந்து விலகாத திசைவேழர், தியாகம் செய்த பொற்சுவை, துரோகம் இழைத்த ஈக்கையன், சத்தியம் மறந்த மைய்யூர் கிழார், மேலும் இதில்வரும் கருக்கை வாணன், திதியன், சுகமதி, அலவன், கீதானி, முறியன் ஆசான், காலம்பன், முசுகுந்தர் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு சொல்லித்தருவதே வாழ்க்கைப் பாடம். பெண்மையும் அவர்கள் வீரமும் இதில் போற்றப்படுவது சிறப்பு.

இதில் எனக்கு முரண்பட்ட கேள்விகளும் ஏராளம் இருக்கிறது. எழுத்தாளர் அவர்கள் சில விஷயங்களில் சமரசம் செய்தி கதையின் போக்கை மாற்றிவிடாரோ என்று தோன்றுகிறது. எது எப்படியாயினும் அவரின் இந்த பெரும் உழைப்பிற்கு எதை தந்தும் ஈடுகட்டமுடியாது. இது நிச்சயம் பரவலாக படிக்கப்படவேண்டும். தமிழனின் மொழியும் இலக்கியமும் சாகாது வாழ இது போன்ற படைப்புகள் நிறைய தேவை.

வேள்பாரியில் என்னை கவர்ந்த வாசகங்கள் :
1. ஆண் அவசரத்தின் அடையாளம், பெண் பக்குவத்தின் அடையாளம்.
2. யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு.
3. இயல்புதான் ஒன்றன் குணத்தை தீர்மானிக்க கூடியது.
4.காதல் சம்பந்தப்பட்டவர்களின் சாமர்த்தியத்தால்தான் கைகூடும்.
5. தீமையை கணப்பொழுதில் நன்மையாய் மாற்ற முடிகிற வல்லமை வார்த்தைகளுக்கு உண்டு.
6.நாடென்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம்
7. உணவு என்பது சேகரிப்பு தானே தவிர உற்பத்தி அல்ல.
8. குழந்தைகளிடம் விட்டுக் கொடுக்கும்போதும் தோற்கும் போதும் தான் ஓர் ஆண் தாய்மையை அனுபவிக்கிறான்.
9. இயற்கை வழங்குகிறது நாங்கள் வாழ்கிறோம். இடையில் விற்கவும் வாங்கவும் நாம் யார்?
10. சொல் சுடும் போது சொல்லைச் சுடுவான் புலவன்.
11. ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறார். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.
12. உரத்து சொல்லப்படுவதை விட காதோடு காதாக பேசும் கதைக்கு வயது அதிகம்.
13. இந்த கணமும் நீ தாக்கப்படலாம் ஆனால் அதற்கு முந்தைய கணம் உன்னுடையது அதில் நீ கையறுநிலையில் நின்றால் உன் குலம் ஆறோடு போகும்.
14. கடித்து இழுக்க விலங்குகளுக்கு பல் இருப்பது போல் மனிதனுக்கு கதை. கதைகள்தான் நல்லவர்களுக்கான கடைசி நம்பிக்கை.
15. பெரும் உண்மைகள் எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்துத்தான் வெளிவருகின்றன.

நம் முன்னோர்கள் நமக்கு உருவாக்கித்தந்த வாழ்க்கை முறையை மறந்து வாழ்கிறோம். கற்றவர்கள் ஆங்காங்கே அவமதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் கற்றவர்களுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பது சொலவடையாகிவிடக் கூடாது. கபிலரும், ஒளவையும் இன்னபிற அறிஞர் பெருமக்களும் இதையெல்லாம் எழுதி வைக்காமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும். எனவே தான் கபிலரை பெரும்புலவர் என்கிறோம். கற்றரிந்தவர்களை போற்றி வளர்க்காத எந்த சமூகமும் அழிந்தொழியும். அப்படி இன்றைய எழுத்தாளர்களையும் நாம் போற்றி பேணி பாதுகாக்க வேண்டும். ஆட்சியாளர்கள் அறம் உணர்த்து ஆட்சி செய்ய வேண்டும். ஏழை மக்கள் நல்வாழ்க்கை வாழ வேண்டும். அப்படி வாழ்தால் பாரி போல் என்றும் இரவாப் புகழுடன் இருப்போம் என்பதில் ஐயமில்லை!

வேள்பாரி – நமக்கான வாழ்க்கை முறை

நூல் : வீரயுக நாயகன் வேள்பாரி (இரண்டு பாகங்கள் )
ஆசிரியர் : சு.வெங்கடேசன்
விலை : 1350/-
வெளியீடு : ஆனந்த விகடன்

வியாழன், 23 ஏப்ரல், 2020

A Man called Ove - Book review

Before starting my review I would like to thank my beloved sister Miss.Hafila for giving this book to me as a birthday gift. Want more from you sissy!!! 

After 26 days I finished a wonderful novel named "A man called ove" by Fredrik Backman . I haven't seen a person like ove in my life. But this character really touched my soul. He is a strict person but filled his heart with a lot of emotions. He was always deceived by his fate. During his childhood, he lost his mother and then his father.  He lived alone in his house which was built by him. Local government cheated him when his house caught fire.

His only hope, only happiness, only peace was his wife Sonja. After Sonja's entry, he saw some blossoms in his life. She was everything to him. Again fate played his role : they had no child. Then finally Sonja left his life. She died. A man called ove decided to commit suicide. Again fate played his role : each  time somebody came to forbid when he tried to commit suicide. Every man needs a woman to make his life meaningful. There are many roles women had : mother, sister, friend,wife etc. If we lose them, our life becomes meaningless. Another woman came to ove's life and that was Parvenah. She turned his life around. And how was that? Read "A man called ove".

This is a story with full of comedy from tragic Ove. Fredrik Backman had sketched all the characters wonderfully. Like Ove, Sonja, Rune, Anitha, Jimmy, Patrick etc, this story had another beautiful character : a cat which lived with Ove. It played a pumped role. 

First of all when I started to read this , I didn't know how to pronounce the word "Ove". I googled it. I was shocked to see one video to pronounce the word Ove and I understood the worth of this book.  I have attached that video link at the end of this for you to pronounce "Ove" and "Parvaneh". In addition, it was adapted as a film of the same name. Buy it and enjoy your reading!!

Links: 
How Do You Say "Ove" : 
https://youtu.be/gfiH9TxJiNU

How do you say "Parvaneh":
https://youtu.be/TKoxB-KrT38

A man Called Ove - A man to be loved

Book : A man called Ove
Author : Fredrik Backman
Price : Rs. 350/-

Yours Lovingly,
Srimalaiyappan Balachandran.

இதன் தமிழ் விமர்சனம்:

நூல் விமர்சனம் : 
"A Man called Ove"

இந்த புத்தகத்தை என் பிறந்தநாள் பரிசாக அளித்த அன்புத் தங்கை ஹபிலாவிற்கு அன்பும் பிரியங்களையும் தவிர என்ன தந்துவிட முடியும் என்னால்! இப்போதைக்கு இந்த விமர்சனம்!!! 
ஒரு ஆங்கில புத்தகத்திற்கு நான் எழுதும் முதல் தமிழ் விமர்சனம். 

இந்த புத்தகத்தை படித்து முடிக்க எனக்கு 26 நாட்கள் ஆகியிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை. அப்படிப்பட்ட உணர்வு பூர்வமான கதை உவா என்ற இந்த மனிதருடையது. இது போன்றதொரு மனிதரை என் வாழ்க்கையில் நான் சந்தித்ததில்லை. இன்னல்களை மட்டுமே தன் குழந்தை பருவம் முதல் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை உங்கள் வாழ்க்கையில் சந்திக்க விரும்பினால் உவாவை படியுங்கள். 

உவா ஒரு நேர்மையான தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்கிற மனிதர். அவர் தன்னைப் போலவே பிறரும் ஒழுங்கு முறைகளை தொடர்ந்து கடைபிடித்து வாழ வேண்டும் என்று விரும்புகிறார். அவர் நினைத்தது போலவே நடந்து போய் இருந்தால் பக்கத்துக்குப் பக்கம் நம்மை சிரிக்க வைக்கிற இந்த புத்தகம் நமக்கு கிடைத்திருக்காது. நம்முடைய பாணியில் சொல்லப்போனால் அவர் ஒரு அந்நியன் அம்பி. 

உவா தன்னுடைய சிறு வயதிலேயே தாயை இழக்கிறார். பிறகு தந்தையுடைய வளர்ப்பில் வளர்கிறார். ஒரு சில ஆண்டுகளில் தன்னுடைய தந்தையையும் இழக்கிறார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று அவர் சொல்லிக் கொடுத்த நெறிமுறைகளை கொண்டு தன்னுடைய வாழ்க்கையை தொடர்கிறார். உவாவிற்கு வேலை செய்வது மிகவும் பிடிக்கும். அவருக்கு கார் ஓட்டுவதும் அதை பராமரிப்பதும் மிகவும் பிடிக்கும். உவா தனக்காக ஒரு வீட்டை கட்டுகிறார். அதுவும் எரிந்து சாம்பல் ஆகிறது. விதி எப்போதும் மனிதர்களை விட்டுவைப்பதில்லை. 

இப்படியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் உவாவின் பொக்கிஷமாக வந்து சேர்கிறார் சோஞ்ஜா. இருவரும் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். கரடுமுரடான மனிதர்களை கடிவாளம் போட்டு இழுக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். உவாவிற்கு சோஞ்ஜா. அவளும் இறந்து போகிறால். ஆணின் வாழ்க்கையில் மனைவி மறைந்த பிறகு ஏது வசந்தம்? 

உவா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார். இந்த மனிதர்கள் நிம்மதியாக சாகவும் விடமாட்டார்கள் என்பதற்கு உவாவே சான்று. ஒவ்வொரு முறையும் அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் போதும் யாரோ ஒருவர் வந்து தடங்கல் செய்துவிடுவார். புத்தகத்தில் வரும் இந்த இடங்கள் எல்லாம் பெட்ரிக் பேக்மேன் தன்னுடைய எழுத்து நடையால் அதகளப்படுத்தி இருப்பார். 

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் ஆன பர்வானே, பேட்ரிக், ருணே, அனிதா, ஜிம்மி, அட்ரியன் என்று அத்தனை கதாபாத்திரங்களையும் அழகாக சித்தரிக்கிறார் பெட்ரிக் பேக்மேன். இதில் ஒரு பூனை இருக்கிறது அது உவாவை போட்டு பாடாய்படுத்தும் இடமெல்லாம் ரணகளம். 

இறுதி அத்தியாயத்தை படிக்கும்போது பர்வானேவிற்கு ஒரு கடிதம் எழுதி இருப்பார் உவா. உங்களால் நிச்சயமாக தேம்பி அழாமல் அதை கடக்க முடியாது. இந்த ஸ்வீடன் நாவல் 2015 இறுதியில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வெளிவந்துவிட்டது. 

A man called Ove - அன்பு செய்யப்பட வேண்டிய மனிதர்!

நூல் : A man called Ove
ஆசிரியர் : பெட்ரிக் பேக்மேன்
விலை : ரூ.350/-

அன்புடன், 
பா. ஸ்ரீமலையப்பன்.

வெள்ளி, 27 மார்ச், 2020

அட்டணக்கால் - நூல் விமர்சனம்

நூல் விமர்சனம் :

"அட்டணக்கால்"

அண்ணன் சோலச்சி அவர்களின் ஐந்தாவது நூல் "அட்டணக்கால்". இதற்கு முன்னால் அவர் எழுதிய நான்கு நூல்களைப் போலவே இதுவும் முழுக்க முழுக்க சமூக நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கிற நூல். சமூகத்தின் மீதுள்ள கோபங்களை தன்னுடைய பேனாவை கொண்டு குத்திக் கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். இந்த நூலில் மொத்தம் 20 சிறுகதைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றும் மணிமணியான சிறுகதைகள். பெரும்பாலும் அவரின் மிக நெருக்கத்தில் இருக்கும் நண்பர்களின் பெயரை கதாபாத்திரங்கள் ஆக்கியிருக்கிறார். மனதிற்குள் வைத்து பூட்டியிருந்த ரணங்களுக்கு வரிகளை கொடுத்து அதை கதைகளாக வடித்து தந்திருக்கிறார். முக்கியமான இரண்டு மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

முதலாவதாக இந்த புத்தகத்தின் தலைப்பான அட்டணக்கால். மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் அதேபோல தற்காலத்திலும் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் கொடுமையையும் நேரில் பார்த்தது போலவே இருக்கிறது அந்தக் கதை. அதில் வரும் முருகேசனை போல எத்தனை பேர் துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்று நினைக்கும் போதே மனம் விம்முகிறது. 

இரண்டாவதாக கடைசி சாவு சிறுகதை. குடும்பத்திற்கு ஒருவர் ராணுவத்திற்கு சென்ற காலம் போய் குடும்பத்திற்கு ஒருவர் மது மீது மயக்கம் கொண்டு தங்களுடைய வாழ்க்கையையும் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் சீரழித்து கொண்டிருக்கக் கூடிய இந்த காலகட்டத்தில் நிரோசா போன்ற ஒரு பெண் எத்தனை துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதே கதை. அந்தக் கதையின் முடிவு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

மூன்றாவதாக குறி . இளம் பெண்கள் தவறான ஆண்களால் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பதை வேறொரு கோணத்தில் கதை ஆக்கியிருக்கிறார் அண்ணன் சோலச்சி அவர்கள். 

இப்படியாக இவை அல்லாமல் இன்னும் 17 கதைகள் இன்னும் சொல்லப்போனால் 17 புதிய கதைக் களங்களை அண்ணன் தேர்வுசெய்து அசத்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும். குழந்தை இலக்கியத்துக்கான சியூக்கியின் பயணம் என்ற ஒரு கதையையும் முயற்சி செய்திருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது. சீக்கிரமாக குழந்தை இலக்கியத்துக்கான ஒரு சிறுகதை நூல் அவரிடமிருந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் அண்ணா.

ஒரு சாமானிய விமர்சகனாக இந்தக் கட்டத்தில் நான் சில கருத்துக்களையும் எழுத்தாளருக்கு வைக்க விரும்புகிறேன். பொதுவாக கதைக்கரு என்பது எழுத்தாளனின் குழந்தை. அந்த குழந்தை எப்படி வரவேண்டும் என்பது எழுத்தாளனின் உரிமை. இதை எந்தவொரு வாசிப்பாளனும் மறுக்க முடியாது. மாறாக ஒவ்வொரு கதையை எழுதும் போதும் வாசிப்பாளர்கள் நோக்கிலும் ஒவ்வொரு எழுத்தாளரும் சிந்திக்க வேண்டும். பள்ளிகளில் மெல்ல கற்கும் மாணவர்கள், தலைசிறந்த மாணவர்கள், சராசரி மாணவர்கள் இருப்பதைப் போலவே வாசிப்புக்கும் இந்த ரகம் உண்டு என்பது என்னுடைய கருத்து. நல்ல களத்தை தேர்வு செய்துவிட்டு தலைசிறந்த மாணவர்களுக்கு மட்டும் புரிந்துவிட்டால் போதுமென்று நினைத்து எழுதிவிட்டால் போதாது எல்லோரையும் மனதில்கொண்டு ஒரு கதைக்கருவும் ஒரு புத்தகமும் அதன் நடையும் வார்த்தைகளும் இருக்கவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். இதை அண்ணன் தன்னுடைய அடுத்தடுத்த களங்களில் முயற்சி செய்வார் என்று நம்புகிறேன். 

என்னுடைய தம்பி மலையப்பன் சிறந்த விமர்சகராக வளர்ந்து கொண்டிருக்கிறார் என்று முதலில் சொன்ன அண்ணனுக்கு முதன்முதலாக அவருடைய நூலுக்கு விமர்சனம் எழுதுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அன்பும் பிரியங்களும் அண்ணா. 

ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் மீதும் அதில் நடக்கும் கொடுமைகளின் மீதும் கோபம் கொள்ள வேண்டும் , அந்தக் கொடுமைகளை மாற்றுவதற்கு முயற்சி செய்யவேண்டும் என்று அட்டணக்கால் போட்டுக்கொண்டு சொல்கிறார் அண்ணன் சோலச்சி.

அட்டணக்கால் - அட்டகாசம்

நூல் - அட்டணக்கால்
ஆசிரியர் : சோலச்சி
விலை : ரூ.150/-
வெளியீடு : மின்னல் கலைக்கூடம்

விமர்சனம்:
பா. ஸ்ரீமலையப்பன்

புதன், 25 மார்ச், 2020

கொரோனா - சில தகவல்கள்

#Stay_at_home

ஊரடங்கின் முதல்நாளை ஓரளவு நிதானமாகவே தமிழக மக்கள் கடந்து இருக்கிறார்கள். ஏதோ ஒரு மனக் கட்டுப்பாட்டோடு இன்றையநாள் கழிந்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டை இறுதிவரை கடைபிடித்து இக்கொடிய நோயை விரட்டியடிப்போம். எங்கள் பகுதியில் சுமார் ஐந்து மணி முதல் பத்து நிமிடத்திற்கு ஒரு வண்டி யாவது சென்று கொண்டிருக்கிறது. இது கொஞ்சம் வேதனையையும் வருத்தத்தையும் தருகிறது.

நீங்கள் எதற்கெல்லாம் வெளியே செல்லலாம் :

1. பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அத்தியாவசிய மருந்து மாத்திரைகள் தேவையெனில் அல்லது வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை எனில்

2. வீட்டிற்கு மிகுந்த மிகுந்த அத்தியாவசிய பொருள் தேவை எனில்

#குறிப்புகள்: 

1. பொருட்களை சிக்கனமாக செலவு செய்யுங்கள். 
2. காலை,மதிய, இரவு உணவுகளை எவ்வளவு சிக்கனமாக முடிக்க முடியுமோ அதை மட்டும் செய்யுங்கள். 
3. வீட்டில் தானே இருக்கிறோம் என்று பலகாரங்கள் செய்ய பொருட்கள் வாங்க கடைக்கு ஓடாதீர்கள்.
4. பரிவர்த்தனைகளை முடிந்தவரை ஆன்லைனில் செய்யுங்கள்.

இதைத் தவிர வெளியே செல்லும் என்னும் உங்களுக்கு வரவே கூடாது. இதுபோன்ற இவர் சொல்லவேண்டிய கருத்துக்களை இந்த பதிவில் தொடரலாம் அதையும் இணைத்துக் கொள்வோம்.

#அன்புடன்:
பா. ஸ்ரீமலையப்பன்

#Stay_at_home
#Stay_away_from_Corona

செவ்வாய், 24 மார்ச், 2020

Stay_away_from_Corona

#Stay_at_home
#Stay_away_from_Corona

எந்த மாதிரியான விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்கள் தங்கள் சொந்த முடிவுகளை மட்டுமே எடுக்கிறார்கள். கூட்டமாக இருக்க வேண்டாம் என்று சொன்னால் வெள்ளம் போல் பேருந்துகளை சுற்றிக் கொண்டு நிற்கின்றார்கள்.

 இக்கொடிய நோய் எவ்வாறெல்லாம் பரவும் என்று எவ்வளவு எடுத்துரைத்தாலும் அதை மக்கள் கேட்பதாக இல்லை. சென்னை மற்றும் பிற பகுதிகளிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவதிலேயே குறியாக இருக்கிறார்கள். 

நாம் தனித்தும் நம் குடும்பம் வேறொரு இடத்தில் இருப்பதும் மிகுந்த வேதனையான ஒன்றுதான். ஆனால் எங்கேயோ இருந்த கொரோனாவை நீங்களே கொண்டு வந்து உங்கள் வீட்டிற்குள்ளும், உங்கள் ஊருக்குள்ளும் திணித்து விடப்போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

தயவு செய்து நீங்கள் இப்பொழுது இருக்கும் இடத்திலேயே இருங்கள். இக்கொடிய நோயிலிருந்து வெளியே வர இந்த கடின சூழ்நிலையை நாம் கடந்துதான் வர வேண்டும்.

அன்புடன்:
ஸ்ரீமலையப்பன்

திங்கள், 23 மார்ச், 2020

சூல் - நூல் விமர்சனம்

*நூல் விமர்சனம்:*

*"சூல்" - சோ.தர்மன்*

*அதிக வரிகள் இருப்பதால் படிக்க மாட்டேன் என்று கடப்பவர்கள் நிச்சயம் படியுங்கள்.*

*இந்த புத்தகத்தை பரிசளித்த என் அன்பு தம்பி அரவிந்த ஹரிஹரனுக்கு என் அன்பும் பிரியங்களும்!*

*இதோ நான் எழுதுவதைப் படித்து விட்டு கொஞ்ச நேரம் கற்பனை செய்து பாருங்கள் இவ்வளவு அழகாக இருந்திருக்கிறது இவ்வுலகம் என்பது உங்களுக்குப் புரியும்.*

நீங்கள் காலையில் எழுந்திருக்கிறீர்கள், உங்கள் வீட்டின் முன்னால் இருக்கும் வேப்ப மரத்தின் மீது ஏறி வேப்பங்குலையை ஒடித்து பல் துலக்குகிறீர்கள், கொட்டகைக்குள் முளை குச்சியில் கட்டியிருக்கும் மாட்டை அவிழ்த்துக் கொண்டு வயலுக்கு செல்கிறீர்கள், பயிருக்கு நீர் பாய்ச்சி விட்டு உங்கள் துணையின் வரவுக்காக மாமரத்தின் கீழ் காத்துக் கிடக்கிறீர்கள், உங்கள் துணை மதிய சாப்பாட்டை கூடையில் வைத்து தலையில் சுமந்து கொண்டு வருகிறார், அந்த மரத்தின் கீழே உட்கார்ந்து அன்பாக உணவு பரிமாறுகிறார், இருவரும் இணைந்து சாப்பிடுகிறீர்கள், ஒரு கயிற்றுக் கட்டில் அங்கேயே கிடைக்கிறது, அதில் சிறிது நேர உறக்கம், மாலை எழுந்து மேய்ச்சலில் இருந்த மாடுகளை பிடித்துக்கொண்டு வீட்டிற்கு செல்கிறீர்கள், உங்கள் அண்டை வீட்டாருடன் உட்கார்ந்து சிறிது நேரம் அரட்டை, பின்னர் இரவு உணவை அக்கம்பக்கத்தாரோடு உட்கார்ந்து பகிர்ந்துண்டு பின்னர் இரவு உறக்கத்திற்கு செல்கிறீர்கள். எப்படி இருந்திருக்கிறது இவ்வுலகம்? அடடா!

அப்பொழுதும் சாதிகள் இருந்திருக்கிறது. எல்லோரும் ஒற்றுமையாக தான் இருந்திருக்கிறார்கள், சண்டைகளும் கூட வந்திருக்கிறது ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நடந்திருக்கிறது. மனிதர்கள் மனிதர்களாக பார்க்கப்பட்டு இருக்கிறார்கள். ஆடுமாடுகள், புழு பூச்சிகள், கம்மாய் கரைகள், வயல்வெளிகள், ஆறு கடல்கள், மலை முகடுகள், செடி கொடிகள், பயிர் வகைகள் அத்தனையையும் அவர்கள் அன்பு செய்திருக்கிறார்கள். சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள். அப்பொழுதும் உயர்ந்த சாதியிலிருந்து தாழ்ந்த சாதி வரை இருந்திருக்கிறது. ஆனால் அனைவருக்கும் ஒன்று தெரிந்திருக்கிறது, இந்த உலகத்தில் எல்லோரும் எல்லாரையும் சார்ந்துதான் வாழ வேண்டும் என்ற நியதியை கடைபிடித்து அன்போடு வாழ்ந்திருக்கிறார்கள். 

அந்த உலகத்தில் அன்பு ஒன்றே பிரதானம். உணவில்லாமல் ஒருவர் இருக்கவே இல்லை. எல்லோர் வீடும் எல்லோருக்காகவும் திறந்தே இருந்திருக்கிறது. மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். ஊருக்காக யாரெல்லாம் உயிர் விட்டார்களோ அவர்களே அவர்களது தெய்வங்களாக மாறி இருக்கிறது. வேறு யாரையும் அவர்கள் கையெடுத்துக் கும்பிட வில்லை. மிகுந்த அறிவாளிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் இயற்கையை காதலித்து இயற்கையை வழிபட்டு இயற்கையை மகிழ்வித்து இருக்கிறார்கள். இயற்கையும் அவர்களை காதலித்து அவர்களை வழிபட்டு அவர்களை மகிழ்வித்து அன்பு செய்து இருக்கிறது. 

ஒரு ஊர்தான் கதை இந்த நூலில். நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்த ஒரு ஊர் இந்த 21 ஆம் நூற்றாண்டில் எப்படி மாறிப் போயிருக்கிறது என்பதை நம் கண்முன்னே காட்டி வாழ்க்கை பற்றிய பயத்தை அதிகம் கூட்டியிருக்கிறது. வேறு மாதிரி சொல்லப்போனால் எப்படி எல்லாம் இருக்க வேண்டிய நாம் இப்படி எவன் கையையோ அண்டிப் பிழைக்கும் அடிமைகளாக, எது மகிழ்ச்சி என்றே தெரியாமல் மகிழ்ந்து கொண்டிருக்கும் ஜடங்கலாக நாம் மாறி விட்டோம் என்று வெட்கித் தலைகுனிய வைப்பதாக இந்நூல் அமைந்திருக்கிறது.

இந்த நூலில் வரும் கதாபாத்திரங்களை இந்த கால குழந்தைகள் கண்டதே இல்லை. நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் மீது இவ்வளவு அன்பு செய்ய முடியுமா என்பதை இந்த நூல் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. இப்போது நாம் நம்மை சுற்றி இருப்பவர் மீது காட்டும் அன்பெல்லாம் என்ன அன்பு?  நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் கல்வி எல்லாம் என்ன கல்வி? 

கோடி கோடியாய் செலவு வைத்து கல்வி கற்று நம் பிள்ளைகள் மண்ணை நோண்டியா திங்க போகிறது? பிள்ளைகளுக்கு எது தேவை என்பதை சொல்லிக் கொடுப்பதற்கு தான் இந்த புத்தகம். நீங்கள் யார் என்பதை கேள்வி கேட்டு பதில் தேடுவதற்கு தான் இந்த புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். அந்த வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வை கொஞ்சமேனும் நீங்கள் வாழ்ந்து பார்த்துவிட்டால் இந்தப் பிறவி எடுத்ததன் பயனை நீங்கள் நிச்சயமாக அடைய முடியும். இந்தப் புத்தகம் 500 பக்கங்களைக் கொண்டது. முதல் 250 பக்கங்கள் பக்கம் பக்கமாக உங்களை அழ வைக்கும் அடுத்த 250 பக்கங்கள் இந்த சீரழிவுக்கு நீங்கள் எவ்வாறு ஆளானீர்கள் என்பதை எடுத்து வைக்கும். 

மனிதனின் வஞ்சகமும், சூழ்ச்சியும், போட்டி பொறாமையும், கெட்ட எண்ணமும் எப்படி உங்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது, நாம் இவ்வளவு வருந்தி வேதனைப்பட்டு வாழ்வதற்கு எது  ஆரம்பமாய் இருந்தது என்பதை முகம் காட்டும் கண்ணாடியாக எடுத்துரைக்கிறது சோ. தர்மன் அய்யா அவர்களின் "சூல்" என்னும் இந்நூல். பிரித்தாளும் சூழ்ச்சியால் மக்களை எப்படி மாக்களாக மாற்றினார்கள் என்பதை சொல்லும் கதை. அறிவாளிகள் பேராசையினால் அழிவுற்றதன் கதை. நிழல் எது நிஜம் எது என்பதை உங்களுக்கு உணரவைக்கும் கதை. இது நம் கதை. நம் மண்ணின் கதை. 

சோ. தர்மன் அவர்களுக்கு இந்த நூலுக்காக எத்தனையோ விருதுகளும், பரிசுகளும், மாலை மரியாதைகளும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் நீங்கள் அவருக்கு விருது கொடுக்க நினைத்தால் ஒரே ஒரு கண்மாயை தூர் வாருங்கள். கொஞ்சமேனும் விளைநிலங்கள் வாங்கி அதில் பயிரிடுங்கள். உங்கள் அண்டை மனிதர்களோடு கொஞ்சமேனும் அன்பாய் இருங்கள். ஒரு கோடி விருது கொடுத்ததற்குச் சமம். நிச்சயமாக இந்த நூலை வாங்கிப் படியுங்கள். நண்பர்களுக்கு பரிசளியுங்கள். இயற்கை பற்றி தெரிந்தவர்கள் இளம் தலைமுறைக்கு அடுத்த தலைமுறைக்கும் இயற்கை சொல்லி கொடுத்து விட்டுப் போங்கள். அதுவே இந்த உலகம் சுவாசிப்பதற்கு ஒரே வழி. 

அதிகமான வாசிப்பு கூட்டங்களையும் விமர்சன கூட்டங்களையும் இந்த நூலுக்காக அமைக்க வேண்டிய பொறுப்பு இலக்கிய மன்றங்களுக்கு இருக்கிறது.

*சூல் - இது கதையல்ல நிஜம்!*

*நூல் : சூல்*
*ஆசிரியர் : சோ. தர்மன்*
*விலை : ரூ.380/-*
*வெளியீடு : அடையாளம் பதிப்பகம்*

*விமர்சனம் :*
*பா.  ஸ்ரீமலையப்பன்*

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...