திங்கள், 23 மார்ச், 2020

சூல் - நூல் விமர்சனம்

*நூல் விமர்சனம்:*

*"சூல்" - சோ.தர்மன்*

*அதிக வரிகள் இருப்பதால் படிக்க மாட்டேன் என்று கடப்பவர்கள் நிச்சயம் படியுங்கள்.*

*இந்த புத்தகத்தை பரிசளித்த என் அன்பு தம்பி அரவிந்த ஹரிஹரனுக்கு என் அன்பும் பிரியங்களும்!*

*இதோ நான் எழுதுவதைப் படித்து விட்டு கொஞ்ச நேரம் கற்பனை செய்து பாருங்கள் இவ்வளவு அழகாக இருந்திருக்கிறது இவ்வுலகம் என்பது உங்களுக்குப் புரியும்.*

நீங்கள் காலையில் எழுந்திருக்கிறீர்கள், உங்கள் வீட்டின் முன்னால் இருக்கும் வேப்ப மரத்தின் மீது ஏறி வேப்பங்குலையை ஒடித்து பல் துலக்குகிறீர்கள், கொட்டகைக்குள் முளை குச்சியில் கட்டியிருக்கும் மாட்டை அவிழ்த்துக் கொண்டு வயலுக்கு செல்கிறீர்கள், பயிருக்கு நீர் பாய்ச்சி விட்டு உங்கள் துணையின் வரவுக்காக மாமரத்தின் கீழ் காத்துக் கிடக்கிறீர்கள், உங்கள் துணை மதிய சாப்பாட்டை கூடையில் வைத்து தலையில் சுமந்து கொண்டு வருகிறார், அந்த மரத்தின் கீழே உட்கார்ந்து அன்பாக உணவு பரிமாறுகிறார், இருவரும் இணைந்து சாப்பிடுகிறீர்கள், ஒரு கயிற்றுக் கட்டில் அங்கேயே கிடைக்கிறது, அதில் சிறிது நேர உறக்கம், மாலை எழுந்து மேய்ச்சலில் இருந்த மாடுகளை பிடித்துக்கொண்டு வீட்டிற்கு செல்கிறீர்கள், உங்கள் அண்டை வீட்டாருடன் உட்கார்ந்து சிறிது நேரம் அரட்டை, பின்னர் இரவு உணவை அக்கம்பக்கத்தாரோடு உட்கார்ந்து பகிர்ந்துண்டு பின்னர் இரவு உறக்கத்திற்கு செல்கிறீர்கள். எப்படி இருந்திருக்கிறது இவ்வுலகம்? அடடா!

அப்பொழுதும் சாதிகள் இருந்திருக்கிறது. எல்லோரும் ஒற்றுமையாக தான் இருந்திருக்கிறார்கள், சண்டைகளும் கூட வந்திருக்கிறது ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நடந்திருக்கிறது. மனிதர்கள் மனிதர்களாக பார்க்கப்பட்டு இருக்கிறார்கள். ஆடுமாடுகள், புழு பூச்சிகள், கம்மாய் கரைகள், வயல்வெளிகள், ஆறு கடல்கள், மலை முகடுகள், செடி கொடிகள், பயிர் வகைகள் அத்தனையையும் அவர்கள் அன்பு செய்திருக்கிறார்கள். சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள். அப்பொழுதும் உயர்ந்த சாதியிலிருந்து தாழ்ந்த சாதி வரை இருந்திருக்கிறது. ஆனால் அனைவருக்கும் ஒன்று தெரிந்திருக்கிறது, இந்த உலகத்தில் எல்லோரும் எல்லாரையும் சார்ந்துதான் வாழ வேண்டும் என்ற நியதியை கடைபிடித்து அன்போடு வாழ்ந்திருக்கிறார்கள். 

அந்த உலகத்தில் அன்பு ஒன்றே பிரதானம். உணவில்லாமல் ஒருவர் இருக்கவே இல்லை. எல்லோர் வீடும் எல்லோருக்காகவும் திறந்தே இருந்திருக்கிறது. மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். ஊருக்காக யாரெல்லாம் உயிர் விட்டார்களோ அவர்களே அவர்களது தெய்வங்களாக மாறி இருக்கிறது. வேறு யாரையும் அவர்கள் கையெடுத்துக் கும்பிட வில்லை. மிகுந்த அறிவாளிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் இயற்கையை காதலித்து இயற்கையை வழிபட்டு இயற்கையை மகிழ்வித்து இருக்கிறார்கள். இயற்கையும் அவர்களை காதலித்து அவர்களை வழிபட்டு அவர்களை மகிழ்வித்து அன்பு செய்து இருக்கிறது. 

ஒரு ஊர்தான் கதை இந்த நூலில். நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்த ஒரு ஊர் இந்த 21 ஆம் நூற்றாண்டில் எப்படி மாறிப் போயிருக்கிறது என்பதை நம் கண்முன்னே காட்டி வாழ்க்கை பற்றிய பயத்தை அதிகம் கூட்டியிருக்கிறது. வேறு மாதிரி சொல்லப்போனால் எப்படி எல்லாம் இருக்க வேண்டிய நாம் இப்படி எவன் கையையோ அண்டிப் பிழைக்கும் அடிமைகளாக, எது மகிழ்ச்சி என்றே தெரியாமல் மகிழ்ந்து கொண்டிருக்கும் ஜடங்கலாக நாம் மாறி விட்டோம் என்று வெட்கித் தலைகுனிய வைப்பதாக இந்நூல் அமைந்திருக்கிறது.

இந்த நூலில் வரும் கதாபாத்திரங்களை இந்த கால குழந்தைகள் கண்டதே இல்லை. நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் மீது இவ்வளவு அன்பு செய்ய முடியுமா என்பதை இந்த நூல் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. இப்போது நாம் நம்மை சுற்றி இருப்பவர் மீது காட்டும் அன்பெல்லாம் என்ன அன்பு?  நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் கல்வி எல்லாம் என்ன கல்வி? 

கோடி கோடியாய் செலவு வைத்து கல்வி கற்று நம் பிள்ளைகள் மண்ணை நோண்டியா திங்க போகிறது? பிள்ளைகளுக்கு எது தேவை என்பதை சொல்லிக் கொடுப்பதற்கு தான் இந்த புத்தகம். நீங்கள் யார் என்பதை கேள்வி கேட்டு பதில் தேடுவதற்கு தான் இந்த புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். அந்த வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வை கொஞ்சமேனும் நீங்கள் வாழ்ந்து பார்த்துவிட்டால் இந்தப் பிறவி எடுத்ததன் பயனை நீங்கள் நிச்சயமாக அடைய முடியும். இந்தப் புத்தகம் 500 பக்கங்களைக் கொண்டது. முதல் 250 பக்கங்கள் பக்கம் பக்கமாக உங்களை அழ வைக்கும் அடுத்த 250 பக்கங்கள் இந்த சீரழிவுக்கு நீங்கள் எவ்வாறு ஆளானீர்கள் என்பதை எடுத்து வைக்கும். 

மனிதனின் வஞ்சகமும், சூழ்ச்சியும், போட்டி பொறாமையும், கெட்ட எண்ணமும் எப்படி உங்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது, நாம் இவ்வளவு வருந்தி வேதனைப்பட்டு வாழ்வதற்கு எது  ஆரம்பமாய் இருந்தது என்பதை முகம் காட்டும் கண்ணாடியாக எடுத்துரைக்கிறது சோ. தர்மன் அய்யா அவர்களின் "சூல்" என்னும் இந்நூல். பிரித்தாளும் சூழ்ச்சியால் மக்களை எப்படி மாக்களாக மாற்றினார்கள் என்பதை சொல்லும் கதை. அறிவாளிகள் பேராசையினால் அழிவுற்றதன் கதை. நிழல் எது நிஜம் எது என்பதை உங்களுக்கு உணரவைக்கும் கதை. இது நம் கதை. நம் மண்ணின் கதை. 

சோ. தர்மன் அவர்களுக்கு இந்த நூலுக்காக எத்தனையோ விருதுகளும், பரிசுகளும், மாலை மரியாதைகளும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் நீங்கள் அவருக்கு விருது கொடுக்க நினைத்தால் ஒரே ஒரு கண்மாயை தூர் வாருங்கள். கொஞ்சமேனும் விளைநிலங்கள் வாங்கி அதில் பயிரிடுங்கள். உங்கள் அண்டை மனிதர்களோடு கொஞ்சமேனும் அன்பாய் இருங்கள். ஒரு கோடி விருது கொடுத்ததற்குச் சமம். நிச்சயமாக இந்த நூலை வாங்கிப் படியுங்கள். நண்பர்களுக்கு பரிசளியுங்கள். இயற்கை பற்றி தெரிந்தவர்கள் இளம் தலைமுறைக்கு அடுத்த தலைமுறைக்கும் இயற்கை சொல்லி கொடுத்து விட்டுப் போங்கள். அதுவே இந்த உலகம் சுவாசிப்பதற்கு ஒரே வழி. 

அதிகமான வாசிப்பு கூட்டங்களையும் விமர்சன கூட்டங்களையும் இந்த நூலுக்காக அமைக்க வேண்டிய பொறுப்பு இலக்கிய மன்றங்களுக்கு இருக்கிறது.

*சூல் - இது கதையல்ல நிஜம்!*

*நூல் : சூல்*
*ஆசிரியர் : சோ. தர்மன்*
*விலை : ரூ.380/-*
*வெளியீடு : அடையாளம் பதிப்பகம்*

*விமர்சனம் :*
*பா.  ஸ்ரீமலையப்பன்*

4 கருத்துகள்:

  1. அருமையான நாவல் படித்து ரசித்திருக்கிறேன்
    நாவலின் இறுதிப் பகுதியில் வருகின்ற பேய் தொடர்பானப் பகுதிகளை மாற்றி எழுதியிருந்தால், நூல் மேலும் சிறப்பு பெற்றிருக்கும் என்பது எனது எண்ணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய எண்ணமும் அதுதான் அய்யா.. இருந்தாலும் அன்றைய மக்கள் எதை நம்பினார்களோ அதை அப்படியே பதிவு செய்துவிட்டார் போலும்...

      நீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...