வெள்ளி, 27 மார்ச், 2020

அட்டணக்கால் - நூல் விமர்சனம்

நூல் விமர்சனம் :

"அட்டணக்கால்"

அண்ணன் சோலச்சி அவர்களின் ஐந்தாவது நூல் "அட்டணக்கால்". இதற்கு முன்னால் அவர் எழுதிய நான்கு நூல்களைப் போலவே இதுவும் முழுக்க முழுக்க சமூக நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கிற நூல். சமூகத்தின் மீதுள்ள கோபங்களை தன்னுடைய பேனாவை கொண்டு குத்திக் கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். இந்த நூலில் மொத்தம் 20 சிறுகதைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றும் மணிமணியான சிறுகதைகள். பெரும்பாலும் அவரின் மிக நெருக்கத்தில் இருக்கும் நண்பர்களின் பெயரை கதாபாத்திரங்கள் ஆக்கியிருக்கிறார். மனதிற்குள் வைத்து பூட்டியிருந்த ரணங்களுக்கு வரிகளை கொடுத்து அதை கதைகளாக வடித்து தந்திருக்கிறார். முக்கியமான இரண்டு மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

முதலாவதாக இந்த புத்தகத்தின் தலைப்பான அட்டணக்கால். மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் அதேபோல தற்காலத்திலும் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் கொடுமையையும் நேரில் பார்த்தது போலவே இருக்கிறது அந்தக் கதை. அதில் வரும் முருகேசனை போல எத்தனை பேர் துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்று நினைக்கும் போதே மனம் விம்முகிறது. 

இரண்டாவதாக கடைசி சாவு சிறுகதை. குடும்பத்திற்கு ஒருவர் ராணுவத்திற்கு சென்ற காலம் போய் குடும்பத்திற்கு ஒருவர் மது மீது மயக்கம் கொண்டு தங்களுடைய வாழ்க்கையையும் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் சீரழித்து கொண்டிருக்கக் கூடிய இந்த காலகட்டத்தில் நிரோசா போன்ற ஒரு பெண் எத்தனை துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதே கதை. அந்தக் கதையின் முடிவு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

மூன்றாவதாக குறி . இளம் பெண்கள் தவறான ஆண்களால் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பதை வேறொரு கோணத்தில் கதை ஆக்கியிருக்கிறார் அண்ணன் சோலச்சி அவர்கள். 

இப்படியாக இவை அல்லாமல் இன்னும் 17 கதைகள் இன்னும் சொல்லப்போனால் 17 புதிய கதைக் களங்களை அண்ணன் தேர்வுசெய்து அசத்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும். குழந்தை இலக்கியத்துக்கான சியூக்கியின் பயணம் என்ற ஒரு கதையையும் முயற்சி செய்திருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது. சீக்கிரமாக குழந்தை இலக்கியத்துக்கான ஒரு சிறுகதை நூல் அவரிடமிருந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் அண்ணா.

ஒரு சாமானிய விமர்சகனாக இந்தக் கட்டத்தில் நான் சில கருத்துக்களையும் எழுத்தாளருக்கு வைக்க விரும்புகிறேன். பொதுவாக கதைக்கரு என்பது எழுத்தாளனின் குழந்தை. அந்த குழந்தை எப்படி வரவேண்டும் என்பது எழுத்தாளனின் உரிமை. இதை எந்தவொரு வாசிப்பாளனும் மறுக்க முடியாது. மாறாக ஒவ்வொரு கதையை எழுதும் போதும் வாசிப்பாளர்கள் நோக்கிலும் ஒவ்வொரு எழுத்தாளரும் சிந்திக்க வேண்டும். பள்ளிகளில் மெல்ல கற்கும் மாணவர்கள், தலைசிறந்த மாணவர்கள், சராசரி மாணவர்கள் இருப்பதைப் போலவே வாசிப்புக்கும் இந்த ரகம் உண்டு என்பது என்னுடைய கருத்து. நல்ல களத்தை தேர்வு செய்துவிட்டு தலைசிறந்த மாணவர்களுக்கு மட்டும் புரிந்துவிட்டால் போதுமென்று நினைத்து எழுதிவிட்டால் போதாது எல்லோரையும் மனதில்கொண்டு ஒரு கதைக்கருவும் ஒரு புத்தகமும் அதன் நடையும் வார்த்தைகளும் இருக்கவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். இதை அண்ணன் தன்னுடைய அடுத்தடுத்த களங்களில் முயற்சி செய்வார் என்று நம்புகிறேன். 

என்னுடைய தம்பி மலையப்பன் சிறந்த விமர்சகராக வளர்ந்து கொண்டிருக்கிறார் என்று முதலில் சொன்ன அண்ணனுக்கு முதன்முதலாக அவருடைய நூலுக்கு விமர்சனம் எழுதுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அன்பும் பிரியங்களும் அண்ணா. 

ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் மீதும் அதில் நடக்கும் கொடுமைகளின் மீதும் கோபம் கொள்ள வேண்டும் , அந்தக் கொடுமைகளை மாற்றுவதற்கு முயற்சி செய்யவேண்டும் என்று அட்டணக்கால் போட்டுக்கொண்டு சொல்கிறார் அண்ணன் சோலச்சி.

அட்டணக்கால் - அட்டகாசம்

நூல் - அட்டணக்கால்
ஆசிரியர் : சோலச்சி
விலை : ரூ.150/-
வெளியீடு : மின்னல் கலைக்கூடம்

விமர்சனம்:
பா. ஸ்ரீமலையப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...