புதன், 4 மார்ச், 2020

அப்பல்லோ : மக்களின் கதை

*நூல் விமர்சனம் :*

*அப்பல்லோ*

இந்த வருடத்தின் முதல் புத்தக விமர்சனம் அண்ணன் அண்டனூர் சுரா அவர்களின் “அப்பல்லோ” நாவல். பொதுவாக எது ஒன்று புதைக்கப்படுகிறதோ அது நிச்சயமாக ஒருநாள் தோண்டி எடுக்கப்பட்டே தீரும் என்பதே வரலாறு. அது நிலக்கரியாகவோ, தங்கமாகவோ, பெட்ரோலாகவோ, தாதுக்களாகவோ, கட்டிடங்களாகவோ, எலும்புக் கூடுகளாகவோ , மனித நாகரீகங்களாகவோ வெளிப்பட்டே தீரும். நம் கீழடி போன்றும், ஆதிச்சநல்லூர் போன்றும் ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒருவரின் முயற்சியின் மூலமாக மக்களை சென்றடையும். இதற்கு கதைகளும் விதிவிலக்கல்ல. நாம் மறந்து போன கதைகளையும் சிந்திக்க தவறிய மருத்துவ குறிப்புகளையும் தன்னுடைய பேனாவை கூர்தீட்டி மீட்டு கொண்டுவந்திருக்கிறார்  “அப்பல்லோ” நாயகன் அண்டனூர் சுரா.

கிரேக்க கதாபாத்திரங்களை கொண்டு தமிழகத்தின் தற்காலத்தை புத்தகத்தின் பக்கங்களில் தவழவிட்டிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாத்திலும் பரபரப்பை கூட்டியிருக்கிறார். இதில் அவர் பயன்படுத்தி இருக்கும் உருவகங்களும், ஒவ்வொரு காட்சிக்கான வசன நடையும் புத்தகத்திற்கு மேலும் மெருகூட்டி இருக்கிறது. எழுத்தின் முதிர்ச்சி மேலும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவ்வளவு அழகாக கையாண்டு இருக்கிறார். 

நாவல் நான் லீனியராக செல்கிறது. ஒரு இடத்திலிருந்து மீண்டும் அவ்விடத்திற்கு வரும்போது எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் கதை நகர்கிறது. ஒரு சாமானிய வாசகனின் பார்வையில் சொன்னால் சில அத்யாயங்களை தவிர்த்திருந்தாலும் கதை தொய்வடையாது இருந்திருக்கும். இந்தகால குழந்தைகளுக்கு பரிச்சயப்படாத தமிழ் வார்த்தைகள் நிறைந்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த நாவலில் எனக்கு பிடித்த வாக்கியங்களை வரிசைபடுத்த விரும்புகிறேன்`
1. கொடியை காற்று அசைக்கலாம் காற்றை யார் அசைப்பது?
2. கற்கண்டை தின்றால் செரிக்கும் கல் செரிக்குமா ?
3. அழகி என்ற பதத்தின் ழ அவள்!
4. உண்மைக்கு தேவை தடிப்பு. பொய்க்கு தேவை நடிப்பு.

இப்படியாக படித்து ரசிக்க ஏராளமான சொலவடைகள், வர்ணனைகள் நிறைந்து இருக்கிறது நாவல். கவிஞனின் வகை, ஒரு அரச குழந்தையை பராமரிக்கும் தாயின் வகை, மருத்துவக்குடி சொல்லும் மருந்தின் வகை, இளைஞர்கள் கொண்டாடும் மீசையின் வகை என நாவலை வகை வகையாக பிரித்து தள்ளியிருக்கிறார்.  இன்னும் கூடுதலாக சொன்னால் அவருடைய வார்த்தைகள் என் மனக்கண்ணில் காட்சியாக மாறிய அத்தருணங்களை நான் எழுதுகிற இந்த நிமிடத்தில் வாசிப்பின்பத்தை  மீண்டும் மீட்டெடுத்துக்கொள்கிறேன். 

ஒரு சமூகம் இறுதியாக யாரை நம்புகிறது மருத்துவர்களை. நம்மை பொறுத்தவரை நம் உயிரை காக்கும் மருத்துவர்களே  மக்களின் கண்ணுக்கு தெரிந்த கடவுளர்கள். நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் தான் நம் வாழ்வாதாரத்தை காக்கும் மருத்துவர்கள். இந்த இருவருக்குமான பொறுப்புகள் என்ன என்பதை தற்காலத்திற்கு ஏற்ப தன்னுடைய எழுத்தின் மூலம் மிகுந்த பொறுப்புடன் லாவகமாக கையாண்டிருக்கிறார் அண்ணன் அண்டனூர் சுரா.

*அப்பல்லோ : மக்களின் கதை*

நூல் : அப்பல்லோ 
ஆசிரியர் : அண்டனூர் சுரா 
விலை : ரூ 240/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

புகைப்பட உதவி : Dr. Hafila

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...