திங்கள், 25 பிப்ரவரி, 2019

மரப்பசு - புன்சிரிப்பு

#மரப்பசு_விமர்சனம்

இறுதியாக 20 நாட்களுக்கு பிறகு மரப்பசு படித்து முடித்துவிட்டேன். தி.ஜா அவர்கள் இந்த கதையை ஒவ்வொரு புள்ளியிலும் மெருகேற்றியிருக்கிறார்.

ஆரம்பத்தில் இந்த நாவலை படிக்க எனக்கு பிடிக்கவில்லை ஏனென்றால் ஒவ்வொரு பத்து பக்கத்தை தாண்டும்போதும் கொஞ்சம் சலிப்போடு கடந்து வந்தேன். காரணம் பேசப்பட்ட கதை என்பது நான் சந்திக்காத சந்திக்க விரும்பாத ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இறுதியாக இந்த கதை எனக்குள் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

 பெண்களுக்கான சுதந்திரம் என்பது இந்த நாட்டில் இருக்கிறதா என்ற கேள்வியை வைத்தால் நிச்சயமாக அது ஒரு ஹைபோதெடிக்கள். ஒரு பெண் இந்த சமூகத்தில் இன்னும் குறிப்பாக இந்திய திருநாட்டில் சுய சிந்தனையின் படி வாழ விரும்பினால் அவளுக்கு பெயர் வேறு என்று இந்த சமூகம் அர்த்தம் சொல்லி வைத்திருக்கிறது.  அந்த நிலையில் ஒரு பெண் சுய சிந்தனையோடு வாழ முடிவெடுத்தால் என்னென்னவெல்லாம் நிகழுமோ அதுவே இந்த நாவல்.

மாறாக  என்னுடைய சிந்தனையில் இந்த கதையில் வரும் அம்மணி போன்றே நாட்டிலுள்ள அனைத்து பெண்களும் அப்படித்தான் இருப்பார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன்.
ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும்  குடும்பச் சூழல் என்பது வேறு சமூகம் என்பது வேறு.

அப்படி இருக்க ஏன் இப்படி ஒரு நாவலை செய்திருக்க வேண்டுமென்று யோசித்தால் அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நாவல் சமூகத்தில் தேவைப்பட்டிருக்குமோ என்னவோ? இந்த காலகட்டத்திற்கு இந்த நாவல் தேவையா என்றால் மூட நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு பெண்களை பொருளாக எண்ணம் கொள்ளும் ஆண்களுக்கு இந்த புத்தகம் நிச்சயம் தேவைப்படும்.

இதையெல்லாம் மீறி எனக்கு அவள் ஒரு தொடர்கதை, அவர்கள் போன்ற பாலச்சந்தர் படங்கள் இந்த நாவலை படிக்கும் போது என் கண்முன்னே ஓடியது. காரணம் பாலச்சந்தர் தன் படங்களில் ஒவ்வொரு சீனுக்கும் அப்படி ஒரு உழைப்பைகொடுத்திருப்பார். பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் பேசும் பாலச்சந்தர் கதாபாத்திரங்கள் போல ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்த நாவலிலும் பேசுவது போல் எனக்கு தோன்றிற்று. பாலச்சந்தர் படம் போன்றே இந்த நாவலை பிளாக் அண்ட் ஒயிட்டில் காட்சிப்படுத்திக்கொண்டேன்.

ஒவ்வொரு பக்கத்திலும் வசனநடை, எதுகை மோனை கொண்ட சொற்கள், ஏராளமான கற்பனை நிறைந்த உவமைகள், நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொற்கள். அப்பப்பா!! தி.ஜா,  தி.ஜாதான். கோபாலி, அம்மணி, மரகதம், பச்சையப்பன், ப்ரூஸ், கண்டு மாமா, அம்மணி பெரியம்மா, பெரியப்பா இப்படி ஒவ்வொன்றும் மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு கதாபாத்திரத்தை ஒரு வாசகனுக்கு கடத்திவிட முடியும் என்றால் நிச்சயமாக அந்த நாவல் நல்ல நாவல் தானே.

தி.ஜா போன்ற பெரிய எழுத்தாளர்களுக்கு, ஜாம்பவான்களுக்கு விமர்சனம் சொல்ல எனக்கு தகுதி இருக்கிறதா என்றால் தெரியவில்லை. மாறாக ஒரு வாசகனாக ஒரு எழுத்தாளன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கதையும் விமர்சிக்கப்படும் போது அந்த நாவல் அந்தக் கதை இன்னும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் சென்றடையும் என்றால் நான் செய்யும் விமர்சனம் தகுதிக்குரியதே!!!

பல்வேறு பதிப்பகங்கள் இந்த நாவலை பதிப்பித்திருக்கிறது. காலச்சுவட்டில் கொஞ்சம் நல்ல பிரண்டாக இருப்பதைப் பார்த்தேன் வாங்கிப் படியுங்கள்.

ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு பெண்ணுக்கு உங்களால் எந்த வகையிலும் துன்பம் நேராமல் இருந்தால், கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சியை அவர்களுக்கு உங்களால் கொடுக்க முடியுமென்றால், அவர்களுடைய சுதந்திரத்திற்கு எவ்விதத்திலும் நீங்கள் தடையாக இல்லாமல் இருந்தால் நிச்சயம் ஒரு மரப்பசு தேவையில்லை.

ஒற்றை வரியில் மரப்பசு பற்றி சொல்ல வேண்டும் என்றால் அம்மணி போன்றே ஒரு புன்சிரிப்போடு இந்த விமர்சனத்தை முடிக்கிறேன்.

#இந்த_ஆண்டில்_இதுவரை_4
#விமர்சனம்

6 கருத்துகள்:

  1. மிகச் சிறப்பான விமர்சனம்.
    வாழ்த்துகள் தம்பி
    நட்பின் வழியில்
    சோலச்சி

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான விமர்சனம். நாவலை மீண்டும் படிக்கத் தோன்றும் விதத்தில் எழுதிதற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...